முயற்சி செய்

வேத பகுதி: ஆதியாகமம் 26:12

"ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்;" ஆதியாகமம் 26:12

ஈசாக்கு தன் தகப்பனாகிய ஆபிரகாமைப் போல ஆண்டவரிடம் மிகுந்த பக்தி உடையவனாக வாழ்ந்து வந்தான். இந்த நிலையில் தேசத்திலே பஞ்சம் வந்தது. ஆகவே அவன் பெலிஸ்தரின் தேசத்திற்கு வருகின்றான். தேசத்திலே வறட்சியான நிலையிலும் கர்த்தர் மேல் தன்னுடைய பாரத்தை வைத்து விதை விதைத்து முயற்சி எடுக்கிறான். வறட்சியான நிலைமையிலும் கர்த்தர் அவன் விதைத்ததை ஆசீர்வதித்ததினால் அவன் நூறு மடங்கு பலனைப் பெற்றுக் கொள்ளுகின்றான்.

நம்முடைய தேவன் நல்லவர். அவர் தம்மை அண்டிக் கொள்ளுகிறவர்களை தள்ளி விடுவதில்லை. தம்மை அண்டிக் கொள்ளுகிறவர்கள் அவருக்குப் பிரியமாய் வாழ்ந்து உழைக்கும் போது கர்த்தர் அவர்களை  ஆசீர்வதித்து உயர்த்த வல்லவராயிருக்கிறார். எந்த முயற்ச்சியும் செய்யாமல் சோம்பலாயிருக்கிறவர்களுக்கு அவர் உதவுவதில்லை. நாமும் கர்த்தருக்குப் பிரியமாய் வாழ்ந்து வரும்போது நம்முடைய முயற்ச்சிகளை கர்த்தர் ஆசீர்வதித்து நன்மையினால் நடத்துவார்.

சிந்தனை: "குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்." நீதிமொழிகள் 21:31 

ஜெபம்: அன்பு நிறைந்த நல்ல ஆண்டவரே நான் உமக்குப் பிரியமாய் நடந்து கடினமாக உழைத்து உம்மிடத்திலிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ள உதவியருளும். என்னில் உள்ள சோம்பலை மாற்றி சுறுசுறுப்பைத் தந்தருளும். ஆமேன். 

தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்