தாழ்மை

"நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்." 1 பேதுரு 5:5





இந்த நவீன உலக வாழ்க்கையில் தாழ்மையாக நடப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக மாறிவிட்டது. தாழ்மையுள்ள மனிதர்களைப் பார்ப்பதும் மிகவும் அரிதாயிருக்கின்றது. எல்லா மனிதர்களும் மேட்டிமையுடனும் பெருமையுடனும் வாழ்வதைத் தான் பார்க்க முடிகின்றது. நான் பெரியவன் நீ பெரியவன் என்று போட்டிபோட்டுக்கொண்டு வாழ்கின்றார்கள். அதின் காரணமாக போட்டிகள் பொறாமைகள் நிறைந்து மனதில் சமாதானம், அன்பு இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் தாழ்ந்து போயிருந்தால் நிம்மதியோடு இருந்திருக்கலாம். நான் என்ற பெருமை, அகந்தை, மேட்டிமை அவர்களது கண்களைத் தடுத்து விட்டது.




வேதாகமத்திலும் தங்களுடைய மேட்டிமையான காரியங்களால் தங்களது சமாதனத்தைத் தொலைத்தவர்களில் சவுலையும் உசியா ராஜாவையும் பாருங்கள். சவுல் தன்னுடைய மேட்டிமையினால் போருக்குச் சென்ற இடத்தில் பலிகளை இட்டதினால் கர்த்தர் அவனுடைய சந்ததிக்கு ராஜ்யபாரத்தைக் கொடுக்கவில்லை. சவுல் தன்னுடையக் காலம் முழுவதும் தன் சந்ததிக்கு ராஜ்ஜியபாரம் கிடைக்காது என்று எண்ணி தாவீதைப் பின்தொடருவதிலேயேச் செலவிட்டான். உசியாவைப் பார்ப்போமானால் கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் மேட்டிமையாகி எருசலேம் தேவாலயத்திலே தூபக்கலசத்தை எடுத்துக் கொண்டுச் சென்று பலியிட்டதினால் கர்த்தருடையக் கோபத்திற்கு ஆளாகி குஷ்டரோகத்தைப் பெற்றுக் கொண்டான். காலம் முழுவதும் தனி அறையிலே தான் வாசம் செய்தான். மரணத்திற்குப் பிறகு கூட அவனை ராஜாக்களின் கல்லறையிலே வைக்கவில்லை. பரிதாபம்.



நாமும் இந்தப் பரிதாபத்திற்கு ஆளாக வேண்டுமா? சிந்திப்போம். கிறிஸ்து இயேசு நமக்குக் கற்றுத் தந்த தாழ்மையோடு வாழ்வோம் கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.



சிந்தனை: "தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்" யாக்கோபு 4:6


ஜெபம்:
கர்த்தாவே நான் என்னிலேத் தாழ்மையைத் தரித்து உமக்குப் பிரியமாய் நடக்கக் கிருபை தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

மீட்பு

"எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;" ரோமர் 3:23,24



இந்த உலகத்தில் மனிதர்களாகப் பிறந்த யாவருமே பாவிகள் தான். நான் பாவம் செய்யவில்லை என்று ஒரு மனிதனாலும் கூற முடியாது. இந்த உலகத்தில் உள்ள மனிதர்கள் அனைவரும் பாவம் செய்ததனால் தேவன் நோவாவை மட்டும் பேழையின் மூலம் காப்பாற்றி மற்ற மனிதர்களை எல்லாம் அழித்தார். பின்னும் ஜனங்கள பாவம் செய்ததனால் தேவன் மோசே மூலமாக ஜனங்களுக்கு நியாயப்பிரமாணத்தை ஏற்படுத்தினார். அதின் மூலமாக ஜனங்கள் செய்த பாவங்களுக்கு பாவநிவிர்த்தியாக பலிகளை ஏற்படுத்திக் கொடுத்தார்.





பலிகளின் மூலமாகப் பாவநிவிர்த்தி செய்து கொள்ளலாம் என்று மக்கள் பின்னும் அதிகமாகப் பாவங்களைச் செய்து இறைவனின் சாயலில் படைக்கப்பட்ட மனிதர்கள் இறைவனின் சாயலை இழந்து விட்டார்கள் ஆகவே தான் இறைவன் தன்னுடைய ஒரேபேரான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இந்த பாவ உலகத்தின் மக்களின் மீட்புக்காக இந்த உலகத்தின் மீட்பராக அனுப்பினார். இயேசு கிறிஸ்து தன்னுடைய ஊழியக் காலத்தில் மக்கள் மனந்திரும்பும்படியாக அறைகூவல் விடுத்தார். அதின் தொடர்ச்சியாகத் தான் இந்த பாவ உலகத்தின் மக்களின் மீட்பிற்காகத் தன்னுடைய உயிரைச் சிலுவையில் தியாகம் செய்தார். இயேசு கிறிஸ்துவின் இரத்ததினாலன்றி ஒருவரும் பரலோகம் செல்லமுடியாது. மீட்பரின் கல்வாரிச் சிலுவையின் இரத்தத்தால் கழுவப்பட்டவர்கள் மாத்திரமே பரலோகராஜ்ஜியத்தைச் சுதந்தரிக்க முடியும். அவருடைய இரத்தத்தால் கழுவப்படாதவர்கள் நரகத்திற்குத் தான் செல்ல முடியும்.





சிந்தனை: நான் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டிருக்கின்றேனா?


ஜெபம்:
அன்பின் தேவனே நான் என்னுடையப் பாவங்களையெல்லாம் உம்மிடம் அறிக்கையிடுகின்றேன் நீர் என்னை மன்னித்து நான் திரும்பவும் பாவ வாழ்க்கையில் விழாதபடி காத்து பரலோக வாழ்வைக் கண்டடையக் கிருபை தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்