நன்மை செய்தல்

"நீங்கள் நன்மை செய்வதிலே சோர்ந்துபோகாமலிருங்கள்." 2 தெசலோனிக்கேயர் 3: 13



அந்த ஊர் இந்து மக்கள் நிறைந்த கிராமம். அங்கு யாருக்காவது வியாதி வந்தால் அங்குள்ளப் பூசாரியிடம் வந்து பூஜை செய்வார்கள். ஒரு நாள் அந்தப் பூஜாரியின் மகனுக்கு பாம்பு கடித்து வாயில் நுறை தள்ளிக்கொண்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான், பூஜாரியோ செய்வதறியாமல் திகைத்துக் கொண்டிருக்கிறான். ஒரு சில மணி நேரத்தில் மரித்துப் போய்விடுவான் என்று அனைவரும் எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வழியே ஆங்கிலேய மிஷனெரி அருள்திரு.ஜாண் தாமஸ் போதகர் வந்துக் கொண்டிருக்கிறார். அந்தச் சிறுவனின் நிலைமையைப் பார்த்தவுடன் உடனடியாக அந்தப் பையனுக்கு மருத்துவ உதவி செய்து அவனைக் காப்பாற்றிகிறார். அந்தக் கிராம மக்கள் அவரைத் தெய்வமாகப் பார்க்கின்றனர். அவரோ கிறிஸ்துவின் அன்பை அவர்களுக்கு விளக்கிக் கூறினார். அந்தக் கிராமமே இயேசுவை ஏற்றுக் கொண்டது, மெய்ஞானமாகியக் கிறிஸ்துவை அறிந்துக் கொண்டதினால் அந்த ஊருக்கு மெய்ஞானபுரம் என்றுப் பேரிட்டார்கள்.



ஆம் பிரியமானவர்களே கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறவர்களாகிய நாமும் மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதைப் பவுல் தேசலோனிக்கேயருக்கு எழுதுகின்ற கடிதத்தில் குறிப்பிடுகின்றார். கிறிஸ்தவர்களாகிய நாம் மற்றவர்களுக்கு நன்மை செய்கின்ற போது மட்டும் தான் நம்மில் மற்றவர்கள் கிறிஸ்துவின் அன்பைக் கண்டுக் கொள்ளுகிறார்கள். போதகர் ஜாண் தாமஸ் அவர்கள் அந்தச் சிறுவனுக்கு உதவியக் காரணத்தினால் தான் அந்தக் கிராம மக்கள் கிறிஸ்துவின் அன்பை ருசித்துக் கொள்ள முடிந்தது. நாமும் நம்மால் முடிந்த நன்மைகளை மற்றவர்களுக்குச் செய்து மற்றவர்களை ஆண்டவரிடம் வழி நடத்தும் கருவியாகப் பயன்படுவோம். கர்த்தர் நம்மை ஆசிர்வத்து வழிநடத்துவார்.




சிந்தனை: "தீமையை விட்டு விலகி, நன்மை செய்; என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய்." சங்கீதம் 37:27


ஜெபம்:
அன்பு நிறைந்த தேவனே நான் என்னைச் சுற்றியுள்ள மக்களுக்கு நன்மை செய்து அதன் மூலமாக அவர்களை ஆதாயம் பண்ணக் கிருபை தாரும், ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்

வேதபகுதி: ஏசாயா 41: 8 - 13


"நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, உன்னை எடுத்து, அதின் எல்லைகளிலிருந்து அழைத்துவந்து: நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்து கொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று சொன்னேன்." ஏசாயா 41: 9



நமது ஆண்டவராகிய கர்த்தர் நம்மைப் பார்த்து நீ என் தாசன் நான் உன்னைத் தெரிந்து கொண்டேன் என்று ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக உரைக்கிறார். இஸ்ரவேல் ஜனங்கள் தங்களை எகிப்து தேசத்திலிருந்து கானான் தேசத்திற்கு வழிநடத்தி அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த தங்கள் தேவனை மறந்து விக்கிரகங்களைத் தெரிந்துக் கொண்டு பாவ வழிகளில் நடந்ததினால் அவர்களை அந்நிய ராஜாக்களுக்கு அடிமைகளாக விற்றுப்போட்டார். இஸ்ரவேல் ஜனங்கள் அந்நிய ராஜாக்களுக்கு அடிமைப்பட்டு அவர்களைச் சேவித்தார்கள்.



இப்படிப்பட்ட காலக்கட்டத்தில் தான் ஆண்டவர் ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக இஸ்ரவேல் ஜனங்களுக்கு நான் உன்னைத் தெரிந்து கொண்டேன் நீ உன்னுடையப் பாவ வழிகளை விட்டு மனந்திரும்பி வருவாயானால் நான் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவேன் என்று கூறுகிறார். நாமும் நம்முடையப் பாவ வாழ்க்கையை விட்டுத் திரும்பி கிறிஸ்துவினண்டை வருவோமானால் நம்மையும் அவர் ஆபிரகாமின் பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டு நம்மையும் தாங்கி வழிநடத்துவார்.




சிந்தனை: நான் கிறிஸ்துவைப் பின்பற்றி நடக்கிறேனா?


ஜெபம்:
ஆண்டவரே நான் உம்மைப் பின்பற்றி நடக்க எனக்கு உதவி புரியும். ஆமேன்



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

ஆசிர்வாதமும் சாபமும்

வேதபகுதி: உபாகமம் 11 : 26 - 32

"இன்று நான் உங்களுக்கு முன்பாக ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைக்கிறேன்."உபாகமம் 11:26


நாம் பரிசுத்த வேதாகமத்தை ஆராய்ந்துப் பார்ப்போமானால் கர்த்தர் நமக்கு முன்பாக இரண்டு காரியங்களை வைக்கிறார். முதலாவது ஆசீர்வாதம், இரண்டாவது சாபம். இந்த இரண்டில் நமக்கு எது தேவை என்பதை நாம் தான் தேர்வு செய்ய வேண்டும்.


கர்த்தர் நமக்குக் கூறிய கற்பனைகள் அனைத்தையும் கைக்கொண்டு அதன் படி நடப்போமானால் நமக்கு ஆசீர்வாததைத் தந்தருளுவார். நாம் கற்பனைகளைக் கைக்கொண்டு நடக்கும் போது ஒரு சில சோதனைகளையும் வேதனைகளையும் சந்திக்க நேரிடும் ஆனால் முடிவோ நமக்கு ஆசிர்வாதமாக இருக்கும். நாம் யோபுவின் வாழ்க்கையைப் பார்ப்போமானால் அவன் அநேகப் பாடுகளின் மத்தியிலும் கர்த்தரை உறுதியாகப் பற்றிக் கொண்டு இருந்ததினால் இரட்டிப்பான ஆசிர்வாதத்தைக் கண்டு கொண்டான். மாறாக நாம் கற்பனைகளைப் பின்பற்றாமல் இருப்போமானால் நமக்குச் சாபங்கள் தான் வரும். நாம் இஸ்ரவேலில் முதல் ராஜாவான சவுலின் வாழ்க்கையைப் பார்ப்போமானால் அவன் கர்த்தரைப் பின்பற்றின நாட்களில் எல்லாம் அவனுக்கு வெற்றி கிடைத்தது. அவன் கர்த்தரின் சத்தத்திற்க்குக் கீழ்ப்படியாமற்போன போது அவனுக்குத் தோல்வி தான் கிடைத்தது. ராஜ்ஜியபாரமும் அவன் குடும்பத்தை விட்டுப் போயிற்று.



சிந்தனை: நாம் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கிறோம்? ஆசீர்வாதத்திற்குரிய பாதையா அல்லது சாபத்திற்கு நேராக வழி நடத்துகிறப் பாதையா?

ஜெபம்:
தேவனே நான் உமது கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்து அதன் மூலம் ஆசீர்வாதத்தைச் சுதந்தரிக்கக் கிருபை தாரும். ஆமேன்.


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்