யோசேப்பின் உயர்வு

வேதபகுதி:ஆதியாகமம் 40,41


"நீ என் அரமனைக்கு அதிகாரியாயிருப்பாய்; உன் வாக்கின்படியே என் ஜனங்களெல்லாரும் அடங்கி நடக்கக்கடவர்கள். சிங்காசனத்தில் மாத்திரம் உன்னிலும் நான் பெரியவனாயிருப்பேன்" ஆதியாகமம் 41:40



எகிப்து தேசத்தில் ஒரு கைதியாய் இருந்த யோசேப்பை அந்தத் தேசத்திற்கே அதிபதியாகக் கர்த்தர் உயர்த்த யோசேப்பினிடத்தில் காணப்பட்ட நற்குணங்கள்.



1. தன்னைத் தாழ்த்தித் தேவனை முன்னிலைப்படுத்துதல்:

யோசேப்பு சொப்பனங்களுடைய அர்த்தத்தை வெளிப்படுத்தக்கூடிய வரத்தைப் பெற்றிருந்தாலும் தன்னைப் பெருமையாக வெளிப்படுத்தாமல், சொப்பனத்திற்கு அர்த்தத்தைத் தேவனே வெளிப்படுத்துவார்( ஆதி 40:8, ஆதி 41:16) என்று தன்னைத் தாழ்த்தித் தேவனை முன்னிலைப்படுத்துகிறான்.

2. பாவத்தை/ துன்மார்க்கமான காரியத்தை வெறுத்தல்:

யோசேப்பு இளவயதாயிருக்கும் போதே தன்னுடைய சகோதரர் செய்யும் தப்பிதங்களைத் தான் சிறுவனாயிருந்தபடியால் தன்னுடைய தகப்பனாரின் கவனத்திற்குக் கொண்டு வந்து தன்னுடைய சகோதரர்களை எச்சரிக்கிறார்.

யோசேப்பு போத்திபாருடைய அரண்மனையில் இருக்கும் போது போத்திபாருடைய மனைவி வலிய அவனிடம் வந்து தவறான உறவிற்கு அழைத்தபோது" நான் தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்வது எப்படி" என்று பாவத்திற்கு விலகி ஓடினான்.

3.மன்னிப்பின் குணம்:

யாக்கோபு மரணமடைந்த பின் யோசேப்பின் சகோதரர் தாங்கள் செய்த காரியத்திற்குப் பழிக்குப் பழி வாங்குவான் என்று பயந்து ஆள் அனுப்புகிறார்கள். அதற்கு யோசேப்பு "நீங்களோ எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள், தேவனோ வெகு ஜனங்களைக் காக்கும்படி அதை நன்மையாக முடியப் பண்ணினார்" என்று அவர்களைச் சமாதானத்தோடே அனுப்பினான்.




தேவன் நமக்குக் கொடுத்த வரங்களினிமித்தம் நம்முடையப் பெருமையை வெளிப்படுத்துகிறோமா அல்லது தேவனுடைய நாமம் மகிமைப்படுகிறதா? பாவங்களை வெறுத்து அவைகளுக்கு விலகி ஓடுகிறோமா? மற்றவர்களிடம் பழிக்குப் பழியான காரியங்களிச் செயல்படுத்துகிறோமா அல்லது நன்மை செய்கின்றோமா?




சிந்தனை: நாம் எப்படிப்பட்ட நிலைமையில் இருக்கிறோம்? சற்றே சிந்தித்துப் பார்ப்போம். யோசேப்பை உயர்த்திய தேவன் நம்மையும் உயர்த்த வல்லவராயிருக்கிறார்.


ஜெபம்: தேவனே நீர் எனக்குத் தந்த வரங்களினிமித்தம் உம்முடைய நாமம் மட்டும் மகிமைப்படவும், பாவங்களுக்கு விலகி ஓடவும், மற்றவர்களுக்குத் தீமைக்குத் தீமை பாராட்டாமல் நன்மையை மட்டுமே செய்ய எனக்கு உதவி புரியும். ஆமேன்.

ஐசுவரியத்தின் நியாயத்தீர்ப்பு

வேதபகுதி:யாக்கோபு 5 : 1 - 6


உங்கள் ஐசுவரியம் அழிந்து, உங்கள் வஸ்திரங்கள் பொட்டரித்துப்போயின. வசனம் 2



யாக்கோபு இந்தப் பகுதியில் ஐசுரியவான்களின் பாவமான காரியங்களைச் சொல்லி அதன் மூலமாக வரும் நியாயத்தீர்ப்புகளைக் குறித்து எச்சரிக்கிறார். அவர்கள் மற்றவர்களை வஞ்சித்து தங்களுக்குப் பணத்தையும் பொருளையும் சேர்ப்பதையே தங்கள் எண்ணமாகக் கொண்டு, தங்களிடம் வேலை பார்க்கும் கூலியாட்களுக்குக் கூலி கொடுக்காமல் மற்றும் தங்களுக்கு அருகில் கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்வது போன்ற நற்காரியங்கள் செய்யாமல் வாழ்கின்றார்கள்.



ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் "ஒட்டகமானது ஊசியின் காதில் நுழைவதை விட ஐசுவரியவான்கள் பரலோகத்திற்குச் செல்வது அரிதாயிருக்கும்" என்று ஐசுவரியவான்களை எச்சரிக்கிறார்.




இங்கிலாந்து தேசத்தில் ஒரு சிறு வியாபாரி வசித்து வந்தார். இவர் கர்த்தருக்குப் பிரியமானபடி வாழ்ந்து வந்தார். இவர் ஆண்டவரிடம் நீர் என்னை இன்னும் அதிகமாக ஆசிர்வதித்தால் ஊழியங்களுக்குத் தசமபாகத்திற்கு அதிகமாகக் காணிக்கைகளை தருவதாக ஜெபித்தார். ஆண்டவரும் இவரை சிறிது சிறிதாக ஆசிர்வதித்து வந்தார். இவர் ஆண்டவரிடம் ஜெபித்தபடி ஒரு சில காலங்கள் ஆண்டவருக்குப் பிரியமாக வாழ்ந்து வந்தார்.சொந்தமாகக் கப்பல் வாங்கி ஏற்றுமதி பண்ணும் அளவிற்கு ஆண்டவர் அவரை ஆசிர்வதித்தார். செல்வம் பெருகப் பெருகத் தன்னுடைய வேலையில் மட்டுமே கவனமாயிருந்து தேவனை மறந்து விட்டார். இப்படிப்பட்ட நிலையில் ஒருநாள் அவருடைய கப்பல் சரக்குகளை ஏற்றிச் செல்லும்போது புயலில் சிக்கிக் கடலில் மூழ்கியது. இந்தச் செய்தியைக் கேட்ட பொழுதுதான் தன்னுடைய தவறை உணர்ந்து தேவனிடம் மன்னிப்புக் கேட்டு மனம் திருந்தினார். இப்படித்தான் ஐசுவரியம் நம்முடைய வாழ்வில் வரும்போது தெய்வபயம் நம்மைவிட்டுப் போய் விடுகின்றது, பின்பு சோதனை வரும் போதுதான் நாம் தேவனை நோக்கிப் பார்கின்றோம்.



ஒருசிலர் தங்களுடைய ஐசுவரியத்தைக் கொண்டு ஏழைகளின் நியாயத்தைப் புரட்டுகிறார்கள். இப்படிப்பட்ட காரியங்கள் எல்லாம் ஒருநாள் தேவனுடைய சந்நிதியில் நியாயத்தில் வந்து நிற்கும். அவர்கள் சேர்த்து வைக்கின்ற பொன்னும் பொருளும் ஒரு நாள் அழிந்து நாசமாகிப் போகும் என்பதை உணராமல் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறார்கள். இதைத் தான் சாலமோன் ராஜா" கர்த்தரின் ஆசிர்வாதமே ஐசுவரியத்தைத் தரும் அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்". அதாவது நாம் கர்த்தருக்குப் பிரியமாய் நடக்கும் போது வருகின்ற ஆசிர்வாதம் மட்டுமே நமக்கு நிம்மதியைக் கொடுக்கும் தவறான முறையில் வருகின்ற ஆசிர்வாதம் வேதனையைத்தான் தரும்.



நாம் கர்த்தருக்குப் பிரியமாய் அவருக்குப் பயந்து நடக்கும் போது அவர் நம்மை ஆசிர்வதிக்கிறார். தீங்கு நம்மை அனுகாமல் பார்த்துக் கொள்ளுவார்.




சிந்தனை: நாம் கர்த்தருக்குப் பயந்து நடக்கிறோமா?


ஜெபம்: தேவனே நான் உமக்குப் பயந்து நடந்து பூமியில் அல்ல பரலோகத்தில் பொக்கிஷத்தைச் சேர்க்கப் பெலமும் ஞானமும் தாரும். ஆமேன்



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்