அழைப்பு

"யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான்" ஏசாயா 6 :8





நமது ஆண்டவராகிய கிறிஸ்து இன்று நம் ஒவ்வோருவரையும் பார்த்து யாரை நான் அனுப்புவேன் என்று கேட்கிறார். அன்று கால்டுவெல், மர்காஷியஸ், ராக்லேண்ட், சீகன் பால்க் போன்றவர்கள் தங்களுடைய உறவினர்கள் மற்றும் தங்களது சொந்தத் தேசங்களை விட்டு தியாகத்துடன் இங்கு வந்து கிறிஸ்துவின் அன்பை நமக்குக் கூறினார்கள். அதோடு மட்டும் இல்லாது நமக்குக் கல்விக்கூடங்கள் அமைத்து கல்வி அறிவையும் நமக்கு கொடுத்துள்ளார்கள். அதின்பயனாகத் தான் நாம் இன்று இந்திய தேசத்திலும் மற்றும் வெளிநாடுகளிலும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகப் பல்வேறு நிலைகளில் உயர்ந்து நிற்கின்றோம்.





ஆனால் நமது இந்திய தேசத்தில் இன்னும் நாம் வாழுகின்ற தமிழகத்தில் கூட அநேகப் பகுதிகளில் வாழும் மக்கள் கிறிஸ்துவின் அன்பை அறியாமலும் கல்வி அறிவைப் பெறாமலும் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களைப் பற்றி நாம் என்றைக்காவது சிந்தித்தது உண்டா?. ஒன்று நாம் கர்த்தருக்காகப் பணிபுரிவதற்கு நம்மை அர்ப்பணிப்போம் அல்லது அவர்களுக்காக மற்றும் அந்தப் பகுதிகளில் பணிபுரிபவர்களுக்காக நம்முடையப் பிரார்த்தனைகளை ஏறெடுப்போம். பிரார்த்தனைகளோடு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்வோம். இல்லையென்றால் நியாயத்தீர்ப்பின் நாளிலே கர்த்தர் நம்மைப் பார்த்து பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை; அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லையென்பார்.அப்பொழுது நாம் பரிதபிக்கப்பட்டவர்களாவோம். ஆண்டவரோ நம்மை நித்திய அக்கினிக் கடலாகிய நரகத்திற்கு நம்மை ஒப்புக் கொடுப்பார். சிந்திப்போம் செயல்படுவோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.





சிந்தனை: எனக்காகச் சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவுக்காக நான் என்ன செய்திருக்கிறேன்?


ஜெபம்:
அன்பின் பிதாவே நான் என்னையே உம்மிடம் அர்ப்பணிக்கின்றேன். நான் உமக்காக ஊழியம் செய்ய என்னைப் பலப்படுத்தும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

இரண்டில் ஒன்று

"நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய்." சங்கீதம் 37:34



இந்த உலகப் பிரகாரமான வாழ்க்கையில் பயணிக்கின்ற நமக்கு முன்பாக இரண்டு வழிகள் வைக்கப்படுகின்றது

1. நித்திய வழி
2. மரண வழி

1. நித்திய வழி:

நித்திய வழி என்ன என்று பார்ப்போமானால் நாம் இயேசு கிறிஸ்துவின் மூலமாக இரட்சிக்கப்பட்டு அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றுதல் ஆகும்.

"நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்." யோவான் 10:9

இயேசு கிறிஸ்துவின் வழியை நாம் பின்பற்றுவதினால் நமக்குக் கிடைக்கும் பலன் என்னவென்றால் உலகப் பிரகாரமான ஆசீர்வாதங்கள் மற்றும் பரலோக வாழ்வு.

" நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்;" எரேமியா 6 : 16


2. மரண வழி:
மரண வழி என்னவென்று பார்ப்போமானால் உலகத்தின் ஆசைகளிலும் அதின் இச்சைகளிலும் சிக்கிப் பாவமான வாழ்க்கை வாழ்வதே ஆகும்.

"மனுஷனுக்குத் செம்மையாய்த் தோன்றுகிறவழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்" நீதிமொழிகள் 14:12

நாம் இந்த வழியைப் பின்பற்றுவதினால் நமக்குக் கிடைக்கும் பலன் நிம்மதியின்மை மற்றும் மரணத்திற்குப் பிறகு எரிகின்ற அக்கினிக் கடலாகிய நரகம்.

"பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்." ரோமர் 6 : 23

நாம் எந்த வழியைப் பின்பற்றிக் கொண்டு இருக்கின்றோம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் . இயேசு கிறிஸ்து தன்னுடைய ஊழியக் காலத்திலே இதனைத் தான் மக்களுக்குப் பிரசங்கித்தார்.

"இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்." மத்தேயு 7 : 13,14

நாமும் நல்ல வழிகளிலே நடக்க முயற்சிப்போம் மற்றவர்களையும் நித்திய வழிக்குள்ளாக நடத்துவோம்.

"துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பும்படி நீ அவனை எச்சரித்தும், அவன் தன் வழியைவிட்டுத்திரும்பாமற்போனால், அவன் தன் அக்கிரமத்திலே சாவான்; நீயோ உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய்." எசேக்கியேல் 33:9

மாறாக நாம் இந்த உலகத்தின் காரியங்களும் வேண்டும் கிறிஸ்துவையும் பின்பற்ற வேண்டும் என்று ஜீவிப்போமானால் நாம் பரிதாபத்திற்கு உள்ளாவோம் .

சிந்தனை: நான் நித்திய வழியில் நடக்கின்றேனா? அல்லது மரண வழியில் நடக்கின்றேனா?

ஜெபம்:
இயெசு கிறிஸ்துவே நான் உம்மைப் பின்பற்றி நித்திய வழியிலே நடப்பதற்குக் கிருபை தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்