யார் கண்ணில் உத்திரம்?

"நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?" மத்தேயு 7 : 3



அந்தக் கிராமத்தில் உள்ள அவர்களது வீட்டிற்குப் பக்கத்து வீட்டிற்குப் புதிதாக ஒரு குடும்பம் குடியேறியது. இந்த வீட்டில் உள்ளப் பெண்மணி தங்களுடைய வீட்டின் கண்ணாடி ஜன்னலின் வழியாகப் பார்க்கின்றார். அங்கு அவர்கள் துவைத்துக் காயப் போட்டிருந்தத் துணிகளைப் பார்க்கும் போது எல்லாம் பழையத் துணிகளாகவும் அழுக்கு நிறைந்ததாகவும் இருந்தது. இந்தப் பெண்மணிக்கு அந்தக் குடும்பத்தின் மீது மிகவும் பரிதாபம் வந்தது. வருகின்ற கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அவர்கள் குடும்பத்தினருக்குப் புதியத் துணிகளை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தார்கள், கிறிஸ்துமஸ் பண்டிகையும் நெருங்கியது. கணவரிடம் தன்னுடைய விருப்பத்தைச் சொல்லுகின்றார். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் மகன் அவனுடைய தாயைப் பார்த்து அம்மா நம்முடைய வீட்டு கண்ணாடி ஜன்னலில் உள்ள தூசியை முதலாவது சுத்தம் செய்யுங்கள் அதன் பிறகு அவர்கள் வீட்டில் காயப் போட்டிருக்கும் துணியைப் பாருங்கள் என்று கூறினான்.



ஆம் பிரியமானவர்களே நாமும் இப்படித்தான் நம்மில் அநேகப் பாவங்களையும் அக்கிரமங்களையும் அசுத்தங்களையும் வைத்துக் கொண்டு அவர் இப்படி இவர் அப்படி என்று மற்றவர்களைப் பார்த்துக் குறை கூறிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் நாம் குறைகூறும் நபர்களை விட நாம் அதிகமானக் குற்றங்களைச் செய்கின்றவராகவும் அசுத்தங்களை உடையவராகவும் வாழ்ந்து வருகின்றோம். முதலாவதாக நம்மில் உள்ளப் பாவங்களையும் அசுத்தங்களையும் களைந்து விட்டு இயேசு கிறிஸ்துவின் தூய இரத்ததினால் கழுவப்பட்டவர்களாக வாழுவோம். நம்மைச் சுற்றியிருக்கின்ற மனிதர்கள் தவறு செய்ப்பவர்களாக இருந்தால் மற்ற மனிதர்களிடம் கூறாமல் நேரடியாக அந்த மனிதரிடமே அவருடையத் தவறுகளைச் சுட்டிக் காட்டி அறிவுரை கூறுவோம் அவர்கள் மனந்திரும்பும்படி அவர்களுக்காக ஜெபிப்போம். நம்முடைய நல்ல நடத்தை அவர்களும் மாறுவதற்கு ஒரு தூண்டுகோலாக அமையும்.




சிந்தனை: என்னுடைய நடவடிக்கைகள் அனைத்தும் பரிசுத்தமானதாக இருக்கின்றதா?


ஜெபம்:
அன்பின் பிதாவே நான் பரிசுத்தமாக வாழ்ந்து அதன் மூலமாக மற்றவர்களை உம்மண்டை வழிநடத்தும் கருவியாகத் திகழ என்னைப் பெலப்படுத்தும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

நன்மை

"அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்." ரோமர் 8 :28


யோசேப்பின் வாழ்க்கையை நாம் உற்று நோக்குவோமானால் அவன் தன்னுடையச் சகோதரர்களால் எகிப்துக்குச் செல்லும் வியாபாரிகளிடம் விற்கப்பட்டான். அவனை அவர்கள் எகிப்து அதிகாரியான போத்திபாரினிடத்தில் விற்றுப்போட்டார்கள். அங்கு போத்திபாரின் மனைவியின் பேச்சிற்கு இணங்கிப் பாவம் செய்யாமல் தேவனுக்குப் பயந்து நடந்ததினால் சிறையில் அடைக்கப்பட்டான். தேவன் சிறைச்சாலைத் தலைவன் கண்களில் தயவு கிடைக்கும்படிச் செய்தார். பார்வோன் கண்டச் சொப்பனத்திற்கு அர்த்தம் சொன்னதின் விளைவாக எகிப்து நாட்டிற்கு அதிபதியாக்கப்பட்டான். உலகமெங்கும் பஞ்சம் ஏற்பட்டதினால் யோசேப்பின் சகோதரர்கள் தானியம் வாங்க வருகிறார்கள். தன்னுடையச் சகோதரர்களிடம் தன்னை வெளிப்படுத்தும் போது நீங்கள் என்னை விற்றுப்போட்டதற்காக வருத்தப்பட வேண்டாம் தேவன் அநேக ஜனங்களைக் காக்கும்படி எல்லாவற்றையும் நன்மையாக மாறப்பண்ணினார் என்று தேவனை மகிமைப்படுத்தினான்.



ஆம் பிரியமானவர்களே நமக்குத் துன்பங்கள் துயரங்கள் வருகின்ற நேரங்களிலெல்லாம் நாம் தேவனை உறுதியாய்ப் பற்றிக் கொண்டு அவருடைய சித்தத்தின்படி நடக்கும் போது அவர் நமக்கு நேரிட்டுள்ள துன்பங்கள் கஷ்டங்கள் எல்லாவற்றையும் மாற்றி நம்மை மற்ற மனிதர்களுக்கு முன்பாக நம்மை உயர்த்துவார். யோபுவின் வாழ்க்கையிலும் இது தான் நடந்தது, யோபு தன்னுடைய துன்ப நேரத்திலும் தேவனை மறுதலிக்கவோ தூஷிக்கவொ இல்லை. எனவே தேவன் அவருடையத் துன்பங்கள் எல்லாவற்றையும் மாற்றி அவருடைய வாழ்க்கையிலே இரட்டிப்பான ஆசீர்வாதத்தைத் தந்தருளினார். நாம் நம்முடையத் துன்ப வேளைகளிலே எப்படி நடக்கின்றோம் என்பதைச் சிந்தித்துப் பார்ப்போம்.




சிந்தனை: நாம் நமது துன்ப வேளைகளில் தேவனை விடாமல் பற்றிக் கொண்டிருக்கின்றோமா? அல்லது தேவனைத் தானே நான் நம்பியிருக்கின்றேன் எனக்கு ஏன் துன்பம் வருகின்றது என்று முறுமுறுக்கின்றோமா?


ஜெபம்:
அன்பின் தேவனே நான் என்னுடையக் கஷ்ட வேளைகளிலும் துன்ப வேளைகளிலும் உம்மை விடாமல் பற்றிக் கொள்ளக் கிருபைகளைத் தாரும். ஆமேன்



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

செவிகொடுக்கும் தேவன்

"ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்." யோவான் 9: 31


ஒரு அலுவலகத்தில் அல்லது நிறுவனத்தில் வேலை பார்க்கின்றோம். நமது உயரதிகாரிகள் சொல்கின்றக் காரியங்களைச் செய்து முடிக்கும் போது நமது மேலதிகாரிகள் நம்மிடம் நன்மதிப்பு வைத்து இருப்பார்கள். நாம் நமது காரியங்களுக்காக அவர்களிடம் உதவி கேட்கும் போது அவர்கள் மறுக்காமல் தன்னால் ஆன உதவிகளைச் செய்வார்கள். நாம் நமக்கு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்களை மதிக்காமல் நடப்போமென்றால் அதனுடைய எதிர்பலன் என்னவாக இருக்கும் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியதில்லை.



இப்படியாக நாமும் நமது தேவனுடைய சத்தத்தைக் கேட்டு அதின்படி நடக்கும் போது தேவனும் நாம் ஏறெடுக்கும் விண்ணப்பங்களுக்குப் பதிலளிப்பார். ஆனால் நாமோ அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுப்பதில்லை. நோவா தேவனின் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்ததினால் அவரும் அவருடையக் குடும்பத்தினரும் உலகத்தின் அழிவினின்றுப் பேழையின் மூலமாகக் காப்பாற்றப்பட்டார்கள். ஆபிரகாம் தன்னுடையக் குமாரனாகிய ஈசாக்கைத் தேவன் பலியிடச் சொன்னபோது தேவனுக்குக் கீழ்ப்படிந்து தன்னுடையக் குமாரனைப் பலியிடச் சென்றதினால் விசுவாசிகளின் தகப்பன் என்றழைக்கப்படுகின்றார். சவுல் ராஜா தேவனுடையச் சத்தத்திற்குக் கீழ்ப்படியாமற்போனதினால் ராஜ்ஜியபாரம் சவுலின் குடும்பத்தை விட்டுத் தாவீதின் குடும்பத்தின் வசம் சென்றது, இப்படி வேதாகமத்தில் இருந்து உதாரணங்களைச் சொல்ல வேண்டுமென்றால் சொல்லிக் கொண்டேப் போகலாம். நாம் தேவனுடைய சத்தத்திற்குச் செவிகொடுப்போம் அவரும் நம்முடைய வேண்டுதல்கள் விருப்பங்கள் எல்லாவற்றையும் நன்மையாகச் செய்து முடிப்பார்.


சிந்தனை: நான் தேவனுடைய சத்தத்திற்குச் செவி கொடுத்து நடக்கின்றேனா?


ஜெபம்:
அன்பின் ஆண்டவரே நான் உம்முடையச் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து நடக்கக் கிருபையும் பெலனும் தந்து வழி நடத்தும். ஆமேன்.


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

பாவத்திற்கு அடிமை

" பாவஞ்செய்கிறன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான்" யோவான் 8:34



புகைப்பிடிக்கும் நபரிடத்திலோ அல்லது குடிப்பழக்கம் உடைய நபரிடத்திலோ நீங்கள் இந்தப் பழக்கத்தை விட்டு விடுவதினால் உங்கள் உடலுக்கு நன்மை என்று நாம் சொன்னால் அவர்கள் நான் இந்தப்பழக்கத்தை விட்டு விட வேண்டும் என்று தான் நினைக்கிறேன் ஆனால் என்னால் முடியவில்லை என்று நம்மிடம் சொல்லுவார்கள். ஒரு சிலர் சினிமாவிற்கு அடிமைகளாக இருப்பார்கள் ஒரு சிலர் தொலைக்காட்சியில் வரும் தொடர் நாடகங்களுக்கு அடிமைகளாக இருப்பார்கள் ஒரு சிலர் தொலைக்காட்சியில் வரும் சில நிகழ்ச்சிகளுக்கு (ஆட்டம் பாட்டம்) அடிமைகளாக இருப்பார்கள். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாவப்பழக்கத்திற்கு அடிமையாக இருப்பார்கள். பாவத்திற்கு அடிமைகளாக இருக்கிறோம் என்று தெரிந்தாலும் அவர்களால் அந்தப் பாவத்தை விட்டு விட முடிவதில்லை. ஏனென்றால் அந்தப் பாவமானது அவர்களை ஆட்கொண்டு அடிமைப்படுத்தி வைத்துள்ளது. இதனால் குடும்பங்களிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பலப் பிரச்சனைகள். இந்தப் பாவக்கட்டுகளில் இருந்து விடுபட ஒரே வழி இயேசு கிறிஸ்துவினால் பாவங்கள் கழுவப்பட்டால் மட்டுமே முடியும்.



எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் அதிகமாகப் புகைப் பிடிக்கும் பழக்கத்தை உடையவர். புகைப்பதினால் ஏற்படும் தீமைகளை நினைத்துப் படிப்படியாகப் புகைப்பதை நிறுத்தினார். நாட்கள் சென்றது. ஒரு சில மாதங்கள் கழித்து மீண்டுமாகப் புகை பிடிக்கும் பழகத்திற்கு அடிமையாகி விட்டார். முழுவதுமாக அந்தப் பாவப்பழக்கத்திலிருந்து அவர் விடுபடாததே அவரை மீண்டும் புகை பிடிப்பதற்குத் தூண்டியது. இயேசுக் கிறிஸ்துவின் விலையேறப்பெற்றக் கல்வாரி இரத்தத்தினால் கழுவப்பட்டு விட்டால் இப்படிப் பட்ட விட முடியாதப் பாவப் பழக்கங்கள் நம்மிடம் இருந்திருந்தால் அவைகள் எல்லாம் அடியோடு மறந்துப் போய்விடும். ஏனென்றால் அவர் நம்முடையப் பாவங்கள் அக்கிரமங்கள் எல்லாவற்றையும் மன்னித்துக் கடலின் ஆழத்திலே போட்டுவிட்டார். நம்மிடையே உள்ள துக்கங்கள் பாரங்கள் எல்லாம் மறைந்துப் போய்விடும்.




சிந்தனை: "நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்." ரோமர் 6:22


ஜெபம்:
இரக்கமும் மனதுருக்கமும் நிறைந்த அன்பின் ஆண்டவரே விட முடியாமல் இருக்கின்றப் பாவப்பழக்கத்தில் இருந்து விடுதலை தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

ஒளியினிடத்தில் வருதல்

"சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்." யோவான் 3 : 21



கடுமையான வெயில் காலம் ஒன்றின் இரவுப் பொழுதில் திடீரென மின்சாரம் தடைபட்டு விடுகின்றது. நம்மால் வீட்டிற்குள் ஒரு சில நிமிடங்கள் கூட மின்சாரம் இல்லாமல் இருக்க முடிவதில்லை காரணம் வெயில் காலத்திலே வீட்டின் வெப்பநிலை மிகவும் அதிகமாகக் காணப்படும். வீட்டிற்கு வெளியே காற்று அடிக்குமா என்று வீட்டிற்கு வெளியே வருகின்றோம். சிறிது நேரத்தில் தடைபட்டிருந்த மின்சாரம் வருகின்றது. உடனே நாம் வீட்டிற்குள்ளே சென்று மின்விசிறிக்குக் கீழேயோ அல்லது குளிர்சாதனப் பெட்டிக்கு முன்பாகவோ சென்று நிற்கின்றோம். மின்சாரம் வந்ததினால் நமது வீட்டினுடைய வெப்பநிலையைச் சிறிது குறைக்கும் என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றோம்.




இதனைப் போலத்தான் இருளான உலக வாழ்விற்கும் சாத்தானிற்கும் அடிமைப்பட்டுக் கிடக்கின்ற நாம் ஒளியான இயேசுக் கிறிஸ்துவினிடத்திற்கு வரும்போது நமக்குக் கிடைக்கின்ற மகிழ்ச்சி அளவிடமுடியாதது. நமது உள்ளம் சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் நிறைவாகக் காணப்படும். ஆனால் நாமோ கற்களுக்கு அடியில் வாழும் சிறு பூச்சிகளைப்போலக் கல்லைப் புரட்டினாலும் மீண்டும் அந்த இருளான கற்களுக்கு அடியிலே செல்வது போல நாமும் மனந்திரும்பாமல் மீண்டும் மீண்டும் பாவமான வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றோம். இப்படியே நாம் வாழ்ந்துக் கொண்டிருப்பதனால் நமக்கும் பயன் இல்லை இந்த உலகத்தில் வாழ்கின்ற மற்ற மக்களுக்கும் பயன் இல்லை. நாம் ஒளியான கிறிஸ்துவை நம் உள்ளத்தில் தரித்துக் கொள்ளும் போது மலையின் மேல் உள்ள பட்டணம் எங்கும் தெரிவது போல நாமும் நம்முடைய நற்காரியங்களால் மற்ற மக்களையும் ஆதாயப்படுத்திக் கொள்ளலாம். இதன் பலன் நமக்குக் கிறிஸ்துவின் வருகையில் அளிக்கப்படும்.




சிந்தனை: நாம் ஒளியின் பிள்ளையாக வாழ்கின்றோமா? அல்லது இருளின் பிள்ளயாக வாழ்கின்றோமா?


ஜெபம்:
அன்பின் தேவனே நான் என்னையே உமக்கு அர்ப்பணிக்கின்றேன் நான் உமது பிள்ளையாக உம் சித்தத்தின்படி நடக்கக் கிருபை தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

நன்மை செய்

மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்;" மத்தேயு 7:12



இந்த வசனத்தை விளக்குவதற்கு ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். நீங்கள் ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நாம் வேலை பார்க்கின்ற அலுவலகத்திற்கு வருகின்ற வாடிக்கையாளர்கள் அல்லது உடன் ஊழியர்கள் ஆகியோரிடம் நாம் எப்படி நடந்துக் கொள்கின்றோம். ஆனால் நமது மேலதிகாரி நம்மிடம் கோபம் கொள்கின்ற போது நமக்கு அவர் மீது எவ்வளவு கோபம் வருகின்றது. இதைத் தானே நாமும் மற்றவர்களுக்குச் செய்கின்றோம் என்று நாம் நினைப்பதில்லை மாறாக அவர் நம்மிடம் காண்பித்தக் கோபத்தை மற்றவர்கள் மீது காட்டுகின்றோம். நாம் நம்மிடம் கூட வேலை பார்ப்பவர்களிடமும் வாடிக்கையாளர்களிடமும் அன்புடன் நடந்து கொண்டு நமது வேலையைச் சரியாகச் செய்யும் போது நமது மேலதிகாரியும் நம்மிடம் கோபம் கொள்ளாமல் நம்மைப் பாராட்டுவார் அல்லவா. நாம் மற்ற மனிதர்களிடம் அன்பு கூர்ந்து நற்காரியங்களைச் செய்யும் போது நம்மைப் பார்க்கின்ற மற்ற மனிதர்களும் நம்மிடம் அன்புடன் நடந்து கொள்வார்கள்.



இதனைத் தான் இயேசுகிறிஸ்துவும் தமது போதனையில் மற்ற மனிதர்கள் நமக்கு என்ன செய்ய வேண்டுமென்று நாம் விரும்புகின்றோமோ அதனையே நீங்களும் பிறருக்குச் செய்யுங்கள் என்று சொல்லுகின்றார். நமக்கு மற்ற மனிதர்கள் நன்மை செய்ய வேண்டும் என்று விரும்புகின்றோமா அல்லது தீமை செய்ய விரும்புகின்றோமா. இவைகளின் காரணக் கருவியாக நம்முடையச் செயல்களே இருக்கின்றது . வள்ளுவரும் "பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்" என்றக் குரளில் இதனைத்தான் வலியுருத்துகின்றார். நாம் மற்றவர்களுக்கு எப்படிச் செய்கின்றோமோ அப்படியே நமக்கும் செய்யப்படும்.




சிந்தனை: மற்றவர்களிடம் நாம் எப்படி நடந்துக் கொள்கின்றோம்?


ஜெபம்:
அன்பின் தேவனே நான் மற்ற மனிதர்களிடம் அன்புகூர்ந்து அவர்களுக்கு நன்மைகள் செய்து அதன் மூலம் உமது நாமத்தை மகிமைப்படுத்தக் கிருபை தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

யார் குற்றவாளி?

வேதபகுதி: மத்தேயு 7 : 1- 5



"நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்." மத்தேயு 7 : 1


ஒரு ஊரில் துறவி ஒருவர் ஒரு குடிசை ஒன்றைப் போட்டுக் கொண்டு அவரைப் பார்க்க வருகின்ற மக்களுக்கு அறிவுரைகள் கூறி வந்தார். அவரது குடிசைக்கு அருகில் ஒரு சிறிய வீடு ஒன்று இருந்தது. அந்த வீட்டில் ஒரு பெண் இருந்தார். அவர் விபசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த துறவி காலையில் தனது குடிசையை விட்டு வெளியே வந்து உட்கார்ந்து விடுவார். அந்த வீட்டிற்கு விபசாரத்திற்கு எத்தனைப் பேர் வருகின்றார்கள் என்பதை எண்ணி அத்தனை அளவு சிறு கற்களை எடுத்து ஒரு மூலையில் போட்டார். நாளாக நாளாக அது ஒரு குவியலானது. துறவிக்கு இது ஒரு பொழுதுபோக்காகவே இருந்தது. துறவிக்கு வயதான காரணதினால் வியாதிப்பட்டார். இந்தத் துறவிக்கு வேலையே அந்தப் பெண்ணைப் பற்றிக் குறை சொல்வது தான். இடைப்பட்ட காலத்தில் அந்தப் பெண்ணும் தன்னுடையத் தவறுகளை எல்லாம் விட்டு விட்டு நல்லவராக வாழ்ந்தார். அந்தப் பெண்ணும் மரித்தார்.ஒரு சில நாட்களில் துறவியும் மரித்தும் விட்டார். ஊர்ப் பெரியவர்கள் கூடி அந்தத் துறவியை நல்ல முறையில் அடக்கம் செய்தனர். இருவரும் மோட்சத்திற்குச் செல்கின்றனர். இறைவன் அந்தப் பெண்ணிற்கு மோட்சத்தையும் துறவிக்கு நரகத்தையும் தீர்ப்பு எழுதினார். துறவி நான் என்னத் தவறு செய்தேன் நரத்திற்கு அனுப்புதற்கு என்று இறைவனிடம் கேட்டார். அதற்கு இறைவன் உனது வாழ்நாள் முழுவது இந்தப் பெண்ணைப் பற்றியே மற்றவர்களிடம் குறைகூறுவதிலேயே களித்தாய் ஆனால் இந்தப் பெண்ணோ தன்னுடையத் தவறுகளை உணர்ந்து திருந்தி வாழ்ந்தாள் என்று கூறினார்.


இது ஒரு வேடிக்கையான கதை தான் என்றாலும் நம்மில் அநேகர் இந்தத் துறவியைப் போலத்தான் மற்றவர்கள் செய்யும் சிறு தவறுகளையும் பெரிதுப்படுத்தி அவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்த்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் நம்மில் உள்ளத் தவறுகளையெல்லாம் மறந்து அல்லது மறைத்துவிட்டு மற்றவர்களைக் குறைகூறுவதிலேயேக் காலந்தள்ளிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அவர்கள் தங்களுடையத் தவறுகளை விட்டு மனந்திரும்பி நியாயத்தீர்ப்பின் நாளிலே நித்தியத்திற்குப் பாத்திரவான்கள் ஆகிவிடுவார்கள். ஆனால் நாமோ அழிவுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு விடப்படுவோம். மற்றவர்களைத் தீர்க்கின்ற நம்மைப் பார்த்துதான் ஆண்டவர் மாயக்காரனே என்று அழைக்கின்றார். மற்றவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்ப்பதற்கு நமக்கு அதிகாரம் இல்லை.இந்த அதிகாரங்கள் தேவனுக்கு உரியது. நாம் நம்மில் உள்ளத் தவறுகளை இறைவனிடம் அறிக்கையிட்டு மன்னிப்பு பெறுவோம். மற்றவர்கள் தவறு செய்பவர்களாயிருந்தால் அவர்கள் மனம் மாறும் படியாக ஜெபிப்போம். தேவன் தாமே நம்மை ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.ஆமேன்.




சிந்தனை: "நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது." 1 யோவான் 1 : 8


ஜெபம்:
அன்பின் ஆண்டவரே நான் மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்காமலும் என்னை மற்றவர்கள் குற்றவாளியாகத் தீர்க்காமலும் இருக்க என்னில் நல் நடக்கையைத் தந்து வழிநடத்தும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

தானியேலின் வெற்றி(ஜெயம்)

"தானியேலின் காரியம் ஜெயமாயிருந்தது." தானியேல் 6:28 பி


தானியேல் இஸ்ரவேல் தேசத்தில் இருந்து பாபிலோனுக்குக் கைதியாகக் கொண்டுச் செல்லப்பட்டார். ஆனாலும் அவர் பாபிலோனில் வாழ்ந்த காலங்களிலெல்லாம் மேன்மேலும் உயர்த்தப்பட்டார். தானியேல் சந்தித்த இராஜாக்கள் நான்கு பேர். இந்த நான்கு இராஜாக்களின் காலத்திலும் தானியேலின் காரியங்கள் அனைத்தும் வெற்றியாய் இருந்தது. தானியேலின் காரியம் ஜெயமாய் இருப்பதற்குத் தானியேலிடம் காணப்பட்ட ஒரு சில நற்காரியங்கள்



1. ராஜ போஜனத்தை விலக்கினான்:

தானியேல் ராஜாவினால் கட்டளையிடப்பட்ட ராஜபோஜனத்தையும் அவரால் கொடுக்கப்படுகின்ற திராட்சைரசத்தையும் விலக்கி விட்டு( தானியேல் 1: 8) மரக்கறிகளைக் கேட்டு வாங்கி உண்கின்றார். ராஜபோஜனத்தில் ஒரு வித போதை வஸ்து கலக்கப்படும் என்று சொல்லப்படுகின்றது. ஆகவே தானியேல் தன்னை மதுபானம் மற்றும் ராஜபோஜனத்தினின்றும் காத்துக் கொள்ளுகின்றார். நாம் இன்னும் மதுப்பழக்கத்தினால் தள்ளாடிக் கொண்டிருக்கின்றோமா? அல்லது எப்படி இருக்கின்றோம்?

2. கூடி ஜெபித்தல்:

தானியேல் பாபிலோனில் உள்ள ஞானிகள் அனைவரையும் கொல்வதற்கு ராஜா உத்தரவிட்டிருக்கிறார் என்பதை அறிகின்றான். ராஜாவிடம் போய் மற்றவர்கள் கொல்லப்படாமல் இருப்பதற்குத் தவனை கேட்கின்றார். தன்னுடைய நண்பர்கள் சாத்ராக் மெஷாக் ஆபேத்நேகோ ஆகியவர்களோடு சேர்ந்து தேவனிடத்தில் விண்ணப்பம் செய்கின்றார்( தானியேல் 2: 18). கர்த்தரும் இவர்களின் ஜெபத்தைக் கேட்டு தானியேலுக்குச் சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் வெளிப்படுத்துகின்றார். நமக்கு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கூடி ஜெபிக்கின்ற பழக்கம் உண்டா?



3. உண்மை :
தானியேல் தன்னுடைய எல்லாக் காரியத்திலும் மிகவும் உண்மையுள்ளவராகக் காணப்படுகின்றார். அப்படி உண்மையுள்ளவராய் இருந்தப்படியினால் பாபிலோனிய அதிகாரிகளால் தானியேலிடத்தில் எந்தக் குற்றமும் கண்டுபிடிக்க முடியவில்லை.( தானியேல் 6:4). நாம் நம்முடையப் பணிகளில் எப்படி இருக்கின்றோம்?

4. தனி ஜெபம்:

தானியேல் தினமும் மூன்று வேலைத் தவறாது இஸ்ரவேலின் தேவனை நோக்கி விண்ணப்பம் செய்து வந்தார்( தானியேல் 6 : 10). நாம் நமது அனுதின வேலையில் தனிஜெபத்திற்கு நேரம் ஒதுக்கி உள்ளோமா?

5. நண்பர்களின் தேர்வு:


தானியேல் எருசலேமிலிருந்து அநேகர் அடிமைகளாக வந்திருந்தாலும் தனது நண்பர்களாக கர்த்தருக்குப் பயந்து நடக்கும் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவைத் தேர்ந்தெடுத்தார். நம்முடைய நண்பர்களின் தேர்வு எப்படி இருக்கின்றது?

நாமும் தானியேலிடம் காணப்பட்ட நற்குணங்களுடன் வாழுவோமென்றால் நம்முடையக் காரியங்களும் ஜெயமாகும் என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை



சிந்தனை: தானியேலிடம் உள்ள நற்குணங்கள் என்னிடத்தில் காணப்படுகின்றதா?


ஜெபம்:
அன்பின் தேவனே தானியேலிடம் காணப்பட்ட அனைத்து நற்குணங்களும் என்னில் காணப்பட உம் கிருபையையும் வழிநடத்துதலையும் தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

மீட்கப்பட்டவர்களின் மகிழ்ச்சி

"கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்." ஏசாயா 35:10







மீட்கப்பட்டவர்கள் யார் என்று பார்ப்போமானால் கல்வாரியில் சிந்த்தப்பட்ட கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டவர்கள். கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டவர்களுக்குக் கிடைக்கும் பலன் என்னவென்றால் அவர்களுக்கு நித்திய மகிழ்ச்சி கிடைக்கும். நித்திய மகிழ்ச்சி என்றால் அவர்களுக்கு இனி துன்பமே கிடையாது சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் மட்டுமே என்றைக்கும் காண்பார்கள். ஆடிப்பாடி மகிழ்வார்கள். அவர்களுக்குத் துக்கம் என்பதும் இனி இல்லை.







இவைகள் அனைத்தும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போது நடக்கும் காரியங்கள். நாம் கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு மீட்கப்பட்டவர்களாகும் போது நமக்கும் அந்த பாக்கியம் கிடைக்கும். நாம் கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்படாமல் பாவங்களோடு வாழ்ந்து கொண்டிருப்போமானால் நாம் பரிதாபத்திற்குரியவர்களாவோம். கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்து வேதத்தில் சொல்லப்பட்டக் காரியங்களெல்லம் நிறைவேறி வருகின்றது. கிறிஸ்துவானவர் விரைவில் வரப்போகின்றார் அப்பொழுது நாம் தகுதியுடையவர்களாயிருந்தால் மட்டுமே அவரைக் கண்டு தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும் மற்றவர்களையெல்லாம் அவர் அக்கினிக் கடலிலே தள்ளி விடுவார்.







சிந்தனை: நான் கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டிருக்கின்றேனா?





ஜெபம்:
கர்த்தாவே என்னை உம்முடைய தூய இரத்தத்தால் கழுவி உம் அன்பினால் என்னை நிரப்பியருளும். ஆமேன்.







தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

ஆலோசனையில் பெரியவர்

"அவர்(கர்த்தர்) ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவர்." ஏசாயா 28:29





நமது தேவனுக்கு இன்னொரு பெயர் ஆலோசனைக் கர்த்தர் என்பதாகும். இறைவன் கொடுக்கும் ஆலோசனைகள் ஆச்சரியமானவை அதிசயமானவை. ஆனால் நாமோ அவைகளைக் கேட்பதற்கும் செயல்படுத்துவதற்கும் முயல்வதில்லை. அவருடைய ஆலோசனைகளுக்குச் செவி கொடுத்து அதின்படி நடக்கும்போது அவைகளின் முடிவோ நாம் நினைப்பதற்கும் எதிர்பார்ப்பதற்கும் அரிய காரியங்களைச் செயல்படுத்துவார். ஆனால் நாமோ இறைவனுடைய ஆலோசனைகளுக்குச் செவிகொடுப்பதில்லை.







மோசேயும் தன்னுடைய வாழ்வில் ஒரு சோதனையைச் சந்திக்க நேரிட்டது. இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து கானானுக்கு வழிநடத்திச் செல்லுகின்ற வழியிலே காதேசிலே தண்ணீர் இல்லாதிருந்தது. கர்த்தர் மோசேயினிடமும் ஆரோனிடமும் தேவனுடையக் கோலை எடுத்துக் கொண்டு கன்மலையிடம் பேசுங்கள் என்று சொன்னார். ஆனால் அவர்களோ கன்மலையை அடித்தார்கள். இஸ்ரவேல் ஜனங்களுக்குத் தண்ணீர் கிடைத்தது ஆனால் மோசேக்கும் ஆரோனுக்கும் கானானுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புக் கிடைக்கவில்லை.



இறைவனுடைய ஆலோசனைகளை நாமும் பெற வேண்டுமானால் நாம் செய்ய வேண்டியது நம்மை முழுவதுமாக அர்ப்பணித்து இறைவனுடைய சன்னிதியில் காத்திருப்போமானால் அவர் தமது ஆலோசனைகளை தரிசனங்களின் மூலமாகவோ அல்லது வேதவசனங்களின் மூலமாகவோ நமக்கு அருளிச் செய்வார். தேவ சன்னிதியில் நாமும் காத்திருந்து ஜெபிப்போம் கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்வார்.







சிந்தனை: நான் தேவனுடைய ஆலோசனைகளுக்குச் செவிகொடுக்கின்றேனா?





ஜெபம்:
கர்த்தாவே நான் உம்முடைய ஆலோசனைகளுக்குச் செவிகொடுத்து அதன்படி நடக்கக் கிருபை செய்யும். ஆமேன்.







தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

வழி நடத்தும் தேவன்

"உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்." சங்கீதம் 37:5





நமது ஆண்டவர் நம்மை முன்சென்று வழிநடத்தும் தேவனாயிருக்கின்றார். அவர் நம்மை நேரானப் பாதையிலே நல்ல மேய்ப்பனாக வழிநடத்துகின்றார். நாம் செல்ல வேண்டியப் பாதை எதுவோ அதனை நமக்குக் காட்டி நம்மை வழிநடத்துகின்றார். இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தின் அடிமைத்தனத்தை விட்டு வரும் போது கர்த்தர் செங்கடலின் வழியாக அவர்களை நடத்துகின்றார். கர்த்தர் அவர்களை குறுக்கான வழியிலே நடத்தியிருக்கலாம். அப்படி நடத்தியிருந்தால் எகிப்தின் சேனைகளினால் பிடிபட்டுப் போயிருப்பார்கள். நாம் நம்மைக் கர்த்தருக்கு ஒப்புவித்து அவருடையச் சித்ததிற்கு நம்மை கையளிப்போமானால் கர்த்தர் நம்முடையக் காரியங்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளுவார். நாம் செய்ய வேண்டியது நம்முடையப் பாரங்கள் எல்லாவற்றையும் அவருடைய சமூகத்தில் ஊற்றி விட வேண்டும். அநேகர் இதனைச் செய்ய மறந்து விடுகின்றனர். பின்னர் நான் கர்த்தருக்குப் பயந்து நடக்கின்றேனே ஏன் எனக்கு இந்தக் காரியம் ஏற்பட்டது என்று புலம்புகிறார்கள்.




ஒரு சில வாரங்களுக்கு முன்பதாக எனது உயரதிகாரி தலைமை அலுவலகத்திலிருந்து வந்திருந்தார். அவர் தான் தங்கியிருக்கும் இடத்தின் முகவரியைக் கொடுத்து அங்கு வந்து பார்க்கும்படியாகச் சொன்னார். எனக்கோ அந்த இடமோ தெரியாது. நான் புறபட்டவுடன் ஆண்டவரே எனக்கு இடம் தெரியாது நீரே என்னை நேர் வழியிலே நடத்தி சரியான இடத்திற்குச் செல்லத் துணை புரியும் என்று ஜெபித்துவிட்டுக் கிளம்பினேன். யாரிடமும் அந்த முகவரியைக் குறித்து விசாரிக்கவில்லை. ஆனால் நான் பல்வேறு சாலைகளைக் கடந்து செல்லுகின்றேன் எனக்குச் சிறிது சந்தேகம் நான் சரியானப் பாதையிலேச் செலுகின்றேனா என்று ஆனால் முடிவிலே நான் செல்லவேண்டிய முகவரிக்கு நேராகக் கர்த்தர் என்னை வழிநடத்தினார். ஆம் பிரியமானவர்களே நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கு முன்பாகவும் ஜெபித்துச் செயல்படுவோமானால் கர்த்தர் நம்முடையக் காரியங்களை ஜெயமாக முடியப்பண்ணுவார்.





சிந்தனை: நான் என்னுடையக் காரியங்களை முதலாவதாகத் தேவனுக்குத் தெரியப்படுத்துகின்றேனா?


ஜெபம்:
கர்தாவே நான் எல்லாக் காரியங்களையும் முதலாவதாக உமக்குத் தெரியப்படுத்தி அதன் மூலமாக ஜெயமாகக் காரியங்களை முடிக்கக் கிருபை தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

கிருபை

"நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை" புலம்பல் 3 :22



கிருபை என்றால் என்ன என்று பார்ப்போமானால் தகுதியில்லாதவர்களுக்குத் தேவன் கொடுக்கின்ற ஈவு. நாம் இம்மட்டும் இருப்பதே கடவுளின் சுத்தக் கிருபையே. அவருடையக் கிருபை இல்லாமல் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.தேவன் யாருக்கெல்லாம் தம்முடையக் கிருபைகளைத் தருகின்றார் என்று பார்ப்போமானால்




1தாழ்மை உள்ளவர்களுக்கு:

தேவன் தாழ்மையுள்ளவர்களுக்குக் கிருபைகளை அளிக்கின்றார். எனது
யாருக்குக் கிருபை என்றப் பதிவில் சிறிது விவரித்து உள்ளேன் அதையும் படிக்கவும்.உசியா ராஜா கடவுள் தனக்கு அளித்திருக்கும் கிருபைகளை மறந்து பெருமை கொண்டு மனமேட்டிமை அடைந்து அவன் செய்த காரியத்தினால் குஷ்ட ரோகியானான்.

"பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்."1 பேதுரு 5 :5


2. இறைவனுக்குப் பயந்து நடப்பவர்களுக்கு:

கர்த்தர் தமக்குப் பயந்து தனது கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவர்களுக்குத் தம்முடையக் கிருபையை அளவில்லாமல் ஊற்றுகின்றார். யோசேப்பின் வாழ்க்கையைப் பார்ப்போமானால் அவன் இறைவனுக்குப் பயந்து நடந்ததினால் கர்த்தர் தமது கிருபையினால் அவனை எகிப்தின் அதிபதியாக உயர்த்தினார்.

"கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது" சங்கீதம் 103:17

"கர்த்தருடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவைகள்." சங்கீதம் 25:10

3. இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு(Faith in God):

தேவன் தம்மேல் நம்பிக்கையாயிருப்பவர்களுக்கு கிருபைகளை அளித்து ஆசீர்வதிப்பார். எசேக்கியா ராஜாவின் வாழ்க்கையைப் பார்ப்போமானால் அவனை எதிரிகள் துரத்துகின்ற சமயத்தில் எல்லாம் அவன் கர்த்தரை மட்டுமே நம்பி ஜெபித்ததினால் அவனுக்கு கிருபை அளித்து அவனுடைய சத்துருக்களினின்று அவனை விலக்கிக் காத்தார்.

"துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும்." சங்கீதம் 32:10



நானும் கடந்த வாரத்திற்கு முந்தின வாரத்தில் அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும்போது முன்பதாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் திடீரெனத் திரும்பியதினால் விபத்திற்குள்ளானேன். வாகனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டு சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டேன். ஆனாலும் சிறியக் காயங்களுடன் கர்த்தர் கிருபையாகக் காத்துக் கொண்டார். ஆம் இறைவனின் கிருபை இல்லையென்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

"என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது." சங்கீதம் 94:18




சிந்தனை: "என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். " 2 கொரிந்தியர் 15:9


ஜெபம்:
கர்த்தாவே உம்முடையக் கிருபைகளை எங்களுக்கு அதிகமாய்த் தந்து எங்களை வழிநடத்தும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

யாருக்கு உயர்வு

"அவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்; கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்." ஏசாயா 33:16





கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் உயர்வு கிடைத்து விடுமா என்று பார்ப்போமானால் இல்லை என்பதே பதில். நீங்கள் உயர்த்தப்படுவீர்கள், ஆசீர்வதிக்கப்படூவீர்கள் என்று தானே ஊழியர்கள் பிரசங்கிக்கின்றார்கள். அவர்கள் கூறுவது பொய்யா அல்லது உண்மையா? பின்னை யார் உயர்வடைவார்கள் என்ற கேள்வி உங்களுக்கு எழும்பக்கூடும். உங்களது கேள்விக்குப் பதில் இங்கே. யார் கிறிஸ்துவின் முன்பாக உயர்த்தப்படுவார்கள் என்று பார்ப்போமானால்




1 நீதி செய்பவர்கள்:

"நீதிமானுடைய சிரசின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்." நீதிமொழிகள் 10: 6

2. செம்மையானவைகளைச் செய்பவர்கள்:


"நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது." சங்கீதம் 97:11

3. பரிதானம்(லஞ்சம்) வாங்காதவர்கள்:


"தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை." சங்கீதம் 15: 5

4.பொல்லாங்கான(தீமையான) காரியங்களைச் செய்யாதவர்கள்:


"பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்." சங்கீதம் 37:9



நாமும் மேலேக் குறிப்பிட்டுள்ளக் காரியங்களைக் கடைப்பிடித்து வாழ்வோமானால் கர்த்தர் நம்மையும் இந்தப் பூமியிலே உயர்த்துவார்.




சிந்தனை: நான் உயர்த்தப்படுவதற்குத் தகுதியாய் இருக்கின்றேனா?


ஜெபம்:
கர்த்தாவே நான் இவைகளைக் கைக்கொண்டு இந்த உலகத்தின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ள உமதுக் கிருபைகளைத் தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

நீதியின் கிரியை

"நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம்." ஏசாயா 32:17





நாம் வாழுகின்ற இந்த நவீனக் காலத்தில் நீதியாய் நடப்பது என்பது மிகவும் கடினமாகவே இருக்கின்றது. கர்த்தருக்குப் பயந்து நீதியாய் நடப்பவர்கள் என்றால் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் இருக்கின்றது. கிறிஸ்தவர்களும் உலகத்தோடு ஒத்துப் போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டு நியாயங்களையும் நீதியையும் விட்டு விடுகின்றார்கள். அநேக கிறிஸ்தவ அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதைக் காண முடிகின்றது. ஒரு சில கிறிஸ்தவ நீதிபதிகளும் கூட லஞ்சம் வாங்கிக் கொண்டு நியாயத்தைப் புரட்டுகின்றார்கள். இப்படி நியாயங்களைப் புரட்டி கர்த்தர் நமக்கு கூறியக் கட்டளையை மறந்து விடுகின்றோம்.

"நியாயவிசாரணையில் அநியாயம் செய்யாதிருங்கள்; சிறியவனுக்கு முகதாட்சிணியம் செய்யாமலும், பெரியவனுடைய முகத்துக்கு அஞ்சாமலும், நீதியாகப் பிறனுக்கு நியாயந்தீர்ப்பாயாக." லேவியராகமம் 19 : 15




நோவா தன்னுடையக் காலத்திலே நீதிமானாக இருந்ததினால் தான் கர்த்தர் அவரை அழிக்கச் சித்தம் கொள்ளாமல் பேழையினால் அவரைக் காப்பாற்றினார்.


"நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்." சங்கீதம் 92: 12



ஆனால் ஆகாப் ராஜாவைப் பாருங்கள் அவன் நாபோத்தினிடமிருந்து தோட்டத்தை அநியாயமாகப் பறித்ததினால் அவனுடைய சந்ததியே அழிந்துப் போனது.


"கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும்" சங்கீதம் 1: 6



நீதி நியாயங்களைப் புரட்டுகின்றக் கடைசிக் காலத்திலே கிறிஸ்துவின் வருகையை எதிர் நோக்கியிருக்கின்ற நாம் கர்த்தருக்குப் பயந்து நீதி நியாயங்களைச் செய்வோமானால் நாமும் அவருடைய வருகையில் நித்திய ராஜ்ஜியத்திற்குச் செல்லலாம்.மாறாக இந்த உலகத்தின் மக்களைப் போல நாமும் அநீதிகளைச் செய்து நியாயங்களைப் புரட்டுவோமானால் நம்மைத் தேவன் நியாயத்தீர்ப்பின் நாளிலே நித்திய அக்கினிக் கடலுக்கு ஒப்புக் கொடுப்பார்.




சிந்தனை: "துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார்." நீதிமொழிகள் 3 : 33


ஜெபம்:
கர்த்தாவே நான் உம்முடையக் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நீதி செய்யவும் நியாயங்களை நிறைவேற்றவும் கிருபை தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

முழு இருதயம்

"இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது;" ஏசாயா 29:13





மேலே குறிப்பிடப்பட்டுள்ள வசனத்தின் நிலைமையில் தான் அநேகக் கிறிஸ்தவர்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்கள். ஏதோ ஞாயிற்றுக்கிழமை என்றால் ஆலயத்திற்குச் செல்ல வேண்டும், பண்டிகைகள் வந்தால் அதற்காகப் புதிய உடைகள் வாங்கவும் சிறப்பாகப் பண்டிகைகளைக் கொண்டாட வேண்டும் என்கின்ற மனப் போக்கில் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்கள். உண்மையான மனதுடனும் தூய இருதயத்துடனும் தேவனை ஆராதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் கடமைக்காக ஆராதனையில் கலந்து கொள்கின்றார்கள். ஆராதனைகளில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டும் மற்றவர்களோடு பேசிக் கொண்டும் தாங்கள் இறைவனின் திருச்சன்னிதியில் இருக்கின்றோம் என்பதை மறந்து விடுகின்றனர். அவர்களைப் பார்த்துதான் இறைவன் மனந்திரும்புங்கள் என்று ஏசாயா தீர்க்கன் மூலமாக எச்சரிக்கின்றார்.




நாம் இன்னும் நம்முடைய இருதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டு இருப்போமானால் நம்மைத் தேவன் நியாயத்தீர்ப்பு நாளிலே அக்கினிக்கு ஒப்புக் கொடுப்பார். அப்பொழுது நம்மைத் தப்புவிப்பார் ஒருவருமில்லை. நாம் நம்மை அர்ப்பணித்து நம்முடைய முழு இருதயத்தோடும் தேவனை ஆராதித்து அவருடையக் கற்பனைகளைப் பின்பற்றி நடப்போமானால் நம்மையும் தேவன் ஆசீர்வதித்து வழிநடத்துவார். மாறாக நாம் இன்னமும் கடமைக் கிறிஸ்தவர்களாக வாழுவோமானால் நாம் தண்டனைக்குத் தப்பித்துக் கொள்ள முடியாது.



"என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்" 1 சாமுவேல் 2 :30



சிந்தனை: நாம் நம்முடைய முழு இருதயத்தோடும் தேவனை ஆராதிக்கின்றோமா?


ஜெபம்:
கர்த்தாவே நான் என்னுடைய முழு இருதயத்தோடும் உமக்குக் கீழ்ப்படிந்து உம்மை உண்மையாய் ஆராதிக்கக் கிருபை தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

தாழ்மை

"நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்." 1 பேதுரு 5:5





இந்த நவீன உலக வாழ்க்கையில் தாழ்மையாக நடப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக மாறிவிட்டது. தாழ்மையுள்ள மனிதர்களைப் பார்ப்பதும் மிகவும் அரிதாயிருக்கின்றது. எல்லா மனிதர்களும் மேட்டிமையுடனும் பெருமையுடனும் வாழ்வதைத் தான் பார்க்க முடிகின்றது. நான் பெரியவன் நீ பெரியவன் என்று போட்டிபோட்டுக்கொண்டு வாழ்கின்றார்கள். அதின் காரணமாக போட்டிகள் பொறாமைகள் நிறைந்து மனதில் சமாதானம், அன்பு இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் தாழ்ந்து போயிருந்தால் நிம்மதியோடு இருந்திருக்கலாம். நான் என்ற பெருமை, அகந்தை, மேட்டிமை அவர்களது கண்களைத் தடுத்து விட்டது.




வேதாகமத்திலும் தங்களுடைய மேட்டிமையான காரியங்களால் தங்களது சமாதனத்தைத் தொலைத்தவர்களில் சவுலையும் உசியா ராஜாவையும் பாருங்கள். சவுல் தன்னுடைய மேட்டிமையினால் போருக்குச் சென்ற இடத்தில் பலிகளை இட்டதினால் கர்த்தர் அவனுடைய சந்ததிக்கு ராஜ்யபாரத்தைக் கொடுக்கவில்லை. சவுல் தன்னுடையக் காலம் முழுவதும் தன் சந்ததிக்கு ராஜ்ஜியபாரம் கிடைக்காது என்று எண்ணி தாவீதைப் பின்தொடருவதிலேயேச் செலவிட்டான். உசியாவைப் பார்ப்போமானால் கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் மேட்டிமையாகி எருசலேம் தேவாலயத்திலே தூபக்கலசத்தை எடுத்துக் கொண்டுச் சென்று பலியிட்டதினால் கர்த்தருடையக் கோபத்திற்கு ஆளாகி குஷ்டரோகத்தைப் பெற்றுக் கொண்டான். காலம் முழுவதும் தனி அறையிலே தான் வாசம் செய்தான். மரணத்திற்குப் பிறகு கூட அவனை ராஜாக்களின் கல்லறையிலே வைக்கவில்லை. பரிதாபம்.



நாமும் இந்தப் பரிதாபத்திற்கு ஆளாக வேண்டுமா? சிந்திப்போம். கிறிஸ்து இயேசு நமக்குக் கற்றுத் தந்த தாழ்மையோடு வாழ்வோம் கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.



சிந்தனை: "தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்" யாக்கோபு 4:6


ஜெபம்:
கர்த்தாவே நான் என்னிலேத் தாழ்மையைத் தரித்து உமக்குப் பிரியமாய் நடக்கக் கிருபை தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

மீட்பு

"எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;" ரோமர் 3:23,24



இந்த உலகத்தில் மனிதர்களாகப் பிறந்த யாவருமே பாவிகள் தான். நான் பாவம் செய்யவில்லை என்று ஒரு மனிதனாலும் கூற முடியாது. இந்த உலகத்தில் உள்ள மனிதர்கள் அனைவரும் பாவம் செய்ததனால் தேவன் நோவாவை மட்டும் பேழையின் மூலம் காப்பாற்றி மற்ற மனிதர்களை எல்லாம் அழித்தார். பின்னும் ஜனங்கள பாவம் செய்ததனால் தேவன் மோசே மூலமாக ஜனங்களுக்கு நியாயப்பிரமாணத்தை ஏற்படுத்தினார். அதின் மூலமாக ஜனங்கள் செய்த பாவங்களுக்கு பாவநிவிர்த்தியாக பலிகளை ஏற்படுத்திக் கொடுத்தார்.





பலிகளின் மூலமாகப் பாவநிவிர்த்தி செய்து கொள்ளலாம் என்று மக்கள் பின்னும் அதிகமாகப் பாவங்களைச் செய்து இறைவனின் சாயலில் படைக்கப்பட்ட மனிதர்கள் இறைவனின் சாயலை இழந்து விட்டார்கள் ஆகவே தான் இறைவன் தன்னுடைய ஒரேபேரான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இந்த பாவ உலகத்தின் மக்களின் மீட்புக்காக இந்த உலகத்தின் மீட்பராக அனுப்பினார். இயேசு கிறிஸ்து தன்னுடைய ஊழியக் காலத்தில் மக்கள் மனந்திரும்பும்படியாக அறைகூவல் விடுத்தார். அதின் தொடர்ச்சியாகத் தான் இந்த பாவ உலகத்தின் மக்களின் மீட்பிற்காகத் தன்னுடைய உயிரைச் சிலுவையில் தியாகம் செய்தார். இயேசு கிறிஸ்துவின் இரத்ததினாலன்றி ஒருவரும் பரலோகம் செல்லமுடியாது. மீட்பரின் கல்வாரிச் சிலுவையின் இரத்தத்தால் கழுவப்பட்டவர்கள் மாத்திரமே பரலோகராஜ்ஜியத்தைச் சுதந்தரிக்க முடியும். அவருடைய இரத்தத்தால் கழுவப்படாதவர்கள் நரகத்திற்குத் தான் செல்ல முடியும்.





சிந்தனை: நான் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டிருக்கின்றேனா?


ஜெபம்:
அன்பின் தேவனே நான் என்னுடையப் பாவங்களையெல்லாம் உம்மிடம் அறிக்கையிடுகின்றேன் நீர் என்னை மன்னித்து நான் திரும்பவும் பாவ வாழ்க்கையில் விழாதபடி காத்து பரலோக வாழ்வைக் கண்டடையக் கிருபை தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

அழைப்பு

"யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான்" ஏசாயா 6 :8





நமது ஆண்டவராகிய கிறிஸ்து இன்று நம் ஒவ்வோருவரையும் பார்த்து யாரை நான் அனுப்புவேன் என்று கேட்கிறார். அன்று கால்டுவெல், மர்காஷியஸ், ராக்லேண்ட், சீகன் பால்க் போன்றவர்கள் தங்களுடைய உறவினர்கள் மற்றும் தங்களது சொந்தத் தேசங்களை விட்டு தியாகத்துடன் இங்கு வந்து கிறிஸ்துவின் அன்பை நமக்குக் கூறினார்கள். அதோடு மட்டும் இல்லாது நமக்குக் கல்விக்கூடங்கள் அமைத்து கல்வி அறிவையும் நமக்கு கொடுத்துள்ளார்கள். அதின்பயனாகத் தான் நாம் இன்று இந்திய தேசத்திலும் மற்றும் வெளிநாடுகளிலும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகப் பல்வேறு நிலைகளில் உயர்ந்து நிற்கின்றோம்.





ஆனால் நமது இந்திய தேசத்தில் இன்னும் நாம் வாழுகின்ற தமிழகத்தில் கூட அநேகப் பகுதிகளில் வாழும் மக்கள் கிறிஸ்துவின் அன்பை அறியாமலும் கல்வி அறிவைப் பெறாமலும் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களைப் பற்றி நாம் என்றைக்காவது சிந்தித்தது உண்டா?. ஒன்று நாம் கர்த்தருக்காகப் பணிபுரிவதற்கு நம்மை அர்ப்பணிப்போம் அல்லது அவர்களுக்காக மற்றும் அந்தப் பகுதிகளில் பணிபுரிபவர்களுக்காக நம்முடையப் பிரார்த்தனைகளை ஏறெடுப்போம். பிரார்த்தனைகளோடு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்வோம். இல்லையென்றால் நியாயத்தீர்ப்பின் நாளிலே கர்த்தர் நம்மைப் பார்த்து பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை; அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லையென்பார்.அப்பொழுது நாம் பரிதபிக்கப்பட்டவர்களாவோம். ஆண்டவரோ நம்மை நித்திய அக்கினிக் கடலாகிய நரகத்திற்கு நம்மை ஒப்புக் கொடுப்பார். சிந்திப்போம் செயல்படுவோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.





சிந்தனை: எனக்காகச் சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவுக்காக நான் என்ன செய்திருக்கிறேன்?


ஜெபம்:
அன்பின் பிதாவே நான் என்னையே உம்மிடம் அர்ப்பணிக்கின்றேன். நான் உமக்காக ஊழியம் செய்ய என்னைப் பலப்படுத்தும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

இரண்டில் ஒன்று

"நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய்." சங்கீதம் 37:34



இந்த உலகப் பிரகாரமான வாழ்க்கையில் பயணிக்கின்ற நமக்கு முன்பாக இரண்டு வழிகள் வைக்கப்படுகின்றது

1. நித்திய வழி
2. மரண வழி

1. நித்திய வழி:

நித்திய வழி என்ன என்று பார்ப்போமானால் நாம் இயேசு கிறிஸ்துவின் மூலமாக இரட்சிக்கப்பட்டு அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றுதல் ஆகும்.

"நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்." யோவான் 10:9

இயேசு கிறிஸ்துவின் வழியை நாம் பின்பற்றுவதினால் நமக்குக் கிடைக்கும் பலன் என்னவென்றால் உலகப் பிரகாரமான ஆசீர்வாதங்கள் மற்றும் பரலோக வாழ்வு.

" நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்;" எரேமியா 6 : 16


2. மரண வழி:
மரண வழி என்னவென்று பார்ப்போமானால் உலகத்தின் ஆசைகளிலும் அதின் இச்சைகளிலும் சிக்கிப் பாவமான வாழ்க்கை வாழ்வதே ஆகும்.

"மனுஷனுக்குத் செம்மையாய்த் தோன்றுகிறவழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்" நீதிமொழிகள் 14:12

நாம் இந்த வழியைப் பின்பற்றுவதினால் நமக்குக் கிடைக்கும் பலன் நிம்மதியின்மை மற்றும் மரணத்திற்குப் பிறகு எரிகின்ற அக்கினிக் கடலாகிய நரகம்.

"பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்." ரோமர் 6 : 23

நாம் எந்த வழியைப் பின்பற்றிக் கொண்டு இருக்கின்றோம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் . இயேசு கிறிஸ்து தன்னுடைய ஊழியக் காலத்திலே இதனைத் தான் மக்களுக்குப் பிரசங்கித்தார்.

"இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்." மத்தேயு 7 : 13,14

நாமும் நல்ல வழிகளிலே நடக்க முயற்சிப்போம் மற்றவர்களையும் நித்திய வழிக்குள்ளாக நடத்துவோம்.

"துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பும்படி நீ அவனை எச்சரித்தும், அவன் தன் வழியைவிட்டுத்திரும்பாமற்போனால், அவன் தன் அக்கிரமத்திலே சாவான்; நீயோ உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய்." எசேக்கியேல் 33:9

மாறாக நாம் இந்த உலகத்தின் காரியங்களும் வேண்டும் கிறிஸ்துவையும் பின்பற்ற வேண்டும் என்று ஜீவிப்போமானால் நாம் பரிதாபத்திற்கு உள்ளாவோம் .

சிந்தனை: நான் நித்திய வழியில் நடக்கின்றேனா? அல்லது மரண வழியில் நடக்கின்றேனா?

ஜெபம்:
இயெசு கிறிஸ்துவே நான் உம்மைப் பின்பற்றி நித்திய வழியிலே நடப்பதற்குக் கிருபை தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

வெளி வேஷம்

வேதபகுதி: யோவான் 15 : 1 - 17

"இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம் தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; நீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வுநாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிச்சகிக்கமாட்டேன்.உங்கள் மாதப்பிறப்புகளையும், உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது; அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது; அவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன்." ஏசாயா 1 : 13,14



இன்றையக் காலத்தில் அநேகக் கிறிஸ்தவர்கள் பொய்க் கிறிஸ்தவர்களாக அல்லது வெளிவேஷக் கிறிஸ்தவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏதோ நாம் காணிக்கைகளை அதிகமாகக் கொடுட்த்தாலோ அல்லது மற்றவர்கள் முன்பதாக நல்லவர்கள் போல நடித்தாலோ நம்மை நல்லவர்கள் என்று மக்கள் எண்ணுவார்கள் என்று மக்களுக்காக நல்லவர்கள் போல நடிக்கின்றார்கள். ஆனால் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் நடப்பது இவைகளுக்கு நேர் எதிரானதாக இருக்கும். அநேகர் தங்களுடையப் பெயர் சபைகளிலே சொல்லப்படவேண்டும் அல்லது தங்களுடையப் பெயர் கல்வெட்டிலேப் பதிக்கப்பட வேண்டும் அல்லது தாங்கள் தான் இந்தச் சபையிலேப் பணக்காரர் என்று காண்பிக்கவேண்டுவதற்காகக் காணிக்கை கொடுக்கின்றார்கள். ஆனால் தங்கள் உள்ளத்திலோ கடவுள் பயம் சிறிது கூட கிடையாது. இதனைத் தான் சாமுவேல் தீர்க்கதரிசி மூலம் சவுலை எச்சரிக்கிறார்,


"கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவி கொடுத்தலும் உத்தமம்." 1 சாமுவேல் 15:22


ஆம் கர்த்தர் நம்முடையக் காணிக்கைகளை விட நாம் அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுப்பதைத் தான் மிகவும் அதிகமாக விரும்புகிறார். நாம் அவருடைய சத்தத்திற்குக் கிழ்ப்படிவோமானால் அவர் நம்மை மேய்ச்சலுல்ல இடங்களிலே நம்மை வழிநடத்துவார். மாறாக நாம் அவருடைய சத்தத்திற்கு விலகி நடந்து வெளிவேஷக் கிறிஸ்தவர்களாக வாழ்ந்து வருவோமானால் சவுலுக்கு ஏற்பட்ட கதி தான் நமக்கும் நடக்கும்.





சிந்தனை: நான் கர்த்தரின் சத்ததிற்குக் கீழ்ப்படிந்து நடக்கிறேனா?


ஜெபம்:
கர்த்தாவே நான் உம்முடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து நடந்து அதன் மூலமாகப் பரலோகப் பாக்கியத்தைப் பெற அருள் புரியும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

கிறிஸ்தவர்கள் பெற வேண்டிய மாற்றங்கள்

நவீன காலத்தில் வாழுகின்ற கிறிஸ்தவர்கள் தங்களுடைய செய்கைகளில் மாற்ற வேண்டியக் ஒரு சிலக் காரியங்கள்

1.ஜெபவேளை

இன்றையக் காலங்களில் ஆராதனை நடக்கும்போது ஜெப வேளைகளில் மக்கள் முழங்கால் படியிடுவதைப் பார்க்க முடிவதில்லை. நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள். அல்லது தரையில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள். நாம் நம்மைப் படைத்த தேவனுக்கு முன்பாக நம்மைத் தாழ்த்தும் போது தான் அவரும் நம்மேல் பிரியம் கொண்டு நம்மை ஆசீர்வதிப்பார்.

"கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்." யாக்கோபு 4:10


2.கைப்பேசி(செல் போன்):

ஆராதனை நேரங்களில் செல்போனை அனைத்து விடுவது நல்லது. நண்பர்கள் உறவினர்களிடம் ஞாயிறு ஆராதனை நேரங்களில் தயவு செய்து என்னை செல்போனில் அழைக்க வேண்டாம் என்று கூறி நல்லது. அதிலும் ஒரு சிலர் சினிமாப் பாடல்களை ரிங்டோனாக(Ring Tone) வைத்துக் கொள்ளுகிறார்கள். ஆராதனை நேரத்தில் அவர்களது செல்போன் அடிக்கும் போது அனைத்து மக்களும் அவர்களைப் பார்க்கின்றார்கள். இது ஆராதனை நடத்துபவர்களுக்கும் ஆராதனையில் பங்கு பெற்றிருப்பவர்களுக்கும் மிகுந்த இடையூறாக இருக்கும். கண்டிப்பாக எனக்கு செல்போனில் அழைத்தவர் எண் உங்களுக்குத் தெரிய வேண்டும் என்றால் ஒன்று சைலன்டில்(Silent) வையுங்கள் அல்லது கால் டைவர்டில்(Call Divert) வையுங்கள். ஒரு சில செல்போன் நிறுவனங்கள் இந்தச் சேவையை இலவசமாக வழங்குகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக நாம் கர்த்தரை ஆராதிக்கத்தான் வந்திருக்கின்றோம் என்பதை உணருங்கள். வாரத்திலுள்ள மற்ற ஆறு நாட்களும் நம்முடையக் காரியங்களுக்காகச் செலவிடுகின்றோம் ஆனால் நம்மை ஆசீர்வதித்தக் கர்த்தருக்காக ஒரு இரண்டு மணி நேராமாவது உங்களால் செலவிட முடியாதா?



3.பாடல் வேளை:

அநேகர் பாடல் வேளைகளின் போது தங்களது வாய்களைத் திறந்து பாடுவது கிடையாது, ஒரு சிலர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் ஆனால் இவர்களைச் சினிமாப் பாடலைப் பாடச் சொன்னால் அப்படியே மனப்பாடமாகப் பாடுவார்கள். கேவலம். இவர்கள் துதியின் வல்லமைகளை உணராதவர்கள். துதியினாலே எரிகோவின் கோட்டை இடிந்து விழுந்ததையும் சிறைச்சாலையில் பவுலும் சீலாவும் பாடியபோது சிறைச்சாலைக் கதவு திறந்ததையும் அதன் மூலமாக சிறைச்சாலைத் தலைவனுடையக் குடும்பம் இரட்சிக்கப்பட்டதையும் இவர்கள் எங்கு அறியப் போகிறார்கள்.பாடகர் குழு மட்டுமே பாட வேண்டும் என்று நினைக்காமல் நம்முடைய உள்ளத்தின் ஆழத்திலிருந்து கர்த்தரைத் துதித்துப் பாடும் போது கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.



4. காலணிகள்:
அநேகர் தாங்கள் தெருக்களிலே உள்ளக் குப்பைகளையெல்லாம் மிதித்துக் கொண்டு வந்தக் காலணிகளோடுக் கூட ஆலயங்களிலே வருகிறார்கள், ஒரு சிலர் ஒரு படி மேலே போய் நன்றிக் காணிக்கைகளை ஏறெடுக்கச் செல்லும் போது கூடத் தங்களுடையக் கால்களில் காலணி அணிந்துச் செல்கின்றார்கள். ஆலயம் என்பது பரிசுத்தமான இடம் என்பதை உணர வேண்டும். இவர்களால் புறமதத்தவர்களுடைய வழிபாட்டு இடங்களுக்குக் காலணிகளுடன் செல்லமுடியுமா? அல்லது ஒரு சில மருத்துவர்களைப் பார்ப்பதற்குக் காலணியுடன் செல்லமுடியுமா? அல்லது ஒரு சில இன்டெர்நெட் புரொவுசிங் சென்டர்களுக்குக் (Internet Browsing Center) காலணியுடன் செல்லமுடியுமா? ஏன் பரிசுத்த ஆலயத்திற்கு இந்த மதிப்புக் கொடுக்கிறீகள். உங்களுடையப் படுக்கை அறைக்குக் கொண்டுச் செல்லமுடியாதவைகளை மட்டும் ஏன் ஆலயத்திற்கு உள்ளே போட்டுக் கொண்டு வருகிறீர்கள். நாம் இருக்கின்ற இடம் பரிசுத்தமான இடம் என்பதை உணர வேண்டும். அப்போழுது தான் கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.



5.வேதாகமம்:

ஆலயத்திற்கு வரும்போது கண்டிப்பாக வேதாகமத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வர வேண்டும். நாம் படிப்பதற்குக் பள்ளிக்கூடம் அல்லது கல்லூரிக்குச் செல்லும்போதோ அல்லது அலுவகங்களுக்குக் கோப்புகளைக் கொண்டுச் செல்லும்போது நாம் தேவையானவைகளைப் பை நிறைய எடுத்துக் கொண்டுச் செல்கிறோமே ஆனால் ஆலயத்திற்கு வரும் போது ஏன் உங்களால் வேதாகமத்தை எடுத்துக் கொண்டு வரமுடிவதில்லை. ஒரு சிலரோ வேதாகமத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வருவதோடு சரி ஆனால் வேதபாடங்கள் வாசிக்கப்படும் போதும் செய்தி வேளையின் போதும் திறந்து பார்ப்பதே கிடையாது. மேலும் வேதாகமத்தை நாம் வாங்கி வைத்தால் மட்டும் போதாது, தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் வாசித்து தியானம் செய்ய வேண்டும். நாம் கர்த்தரை இந்த உலகத்தில் அறிக்கைப் பண்ணும் போது தான் கர்த்தரும் நம்மை இவர்கள் என்னுடையப் பிள்ளைகள் என்று அறிக்கை பண்ணுவார்.

"மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன்" மத்தேயு 10:32



6. அருளுரைக்குச் செவிகொடுத்தல்:

ஞாயிற்றுக்கிழமைகளில் ஆராதனைக்கு மட்டும் வந்தால் போதாது செய்தி வேளையின் போது செய்தியாளர் கொடுக்கின்றச் செய்தியை நாம் கவனமுடன் கேட்கவேண்டும். கேட்பதோடு மட்டும் அல்லாது அதில் இருந்து நாம் நம்முடைய வாழ்க்கையில் திருத்த வேண்டியக் குறைகளைத் திருத்த முற்பட வேண்டும்.. அப்படி நாம் நடக்கும் போது தான் நல்ல நிலத்தில் விழுந்த விதைகளைப் போல நாமும் கர்த்தருக்குள் நற்கனியுள்ள வாழ்க்கையை வாழ முடியும். ஒரு சிலர் செய்தி வேளைதான் நமக்கு ஒய்வு எடுக்கக்கூடிய நேரம் என்றெண்ணி நன்றாகத் தூங்குகிறார்கள். நாம் இப்படிச் செயல்பட்டால் அது நமக்குச் சாபத்தையும் ஆசீர்வாதக் குறைவையும் தருவிக்கும். இப்படிச் செய்வதனால் நாம் ஏன் கர்த்தருடையக் கோபத்திற்கு ஆளாக வேண்டும்.


"வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது."நீதிமொழிகள் 28:9



7.குறை கூறுதல்:

குறை கூறுவது என்பது மிகவும் எளிதானது எனவே நாம் போதகர்களையும் நிர்வாகிகளையும் மிகவும் எளிதில் குறை கண்டுபிடித்துவிடலாம். நாம் நம்முடையக் கண்களில் உத்திரத்தை வைத்துக் கொண்டு மற்றவர்கள் கண்களில் உள்ளத் துரும்பைப் பார்ப்பது ஏன்?. நாம் குறை கூறுவதை விட்டு விட்டு நம்மால் முடிந்தவைகளை ஆலயக் காரியங்களில் செய்வோம். நாம் அவர்கள் மனம் மாறுவதற்காக ஜெபிப்போம். அவர்கள் தவறு செய்திருந்தால் கடவுள் அவர்களுக்குத் தண்டனையைக் கொடுப்பார். மனிதனாகப் பிறந்த ஒருவனும் நீதிமான் அல்லவே. மற்றவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்ப்பதற்கு நாம் யார்? நாம் நீதிமானோ? அல்லவே. பின்னே நம் வேலையை நாம் பார்க்கவேண்டியது தானே அவர்களைக் குறை கூறி நாம் ஏன் அவர்களின் வெறுப்பையும் அவர்களுக்குக் கடவுள் தரும் சாபத்தையும் குறைக்க வேண்டும். எல்லாவற்றையும் நியாயந்தீர்ப்பதற்கு நியாயாதிபதி ஒருவர் இருக்கிறார், அவர் பார்த்துக் கொள்ளுவார்.



8.வேடிக்கைப் பார்த்தல்:

நாம் ஆலயத்திற்கு வந்திருப்பது இறைவனை ஆராதிப்பதற்காகத் தான் வந்திருக்கிறோம் என்பதை உணர வேண்டும். வேடிக்கைப் பார்பதென்றால் பூங்காவிற்கோ அல்லது பொழுது போக்குவதற்கான இடங்களுக்கோச் செல்லுங்கள். நீங்கள் ஆலயத்திற்கு வந்து ஏன் மற்றவர்களைக் கெடுக்க வேண்டும்.



9. சண்டை போடுதல்

போதகரிடத்திலோ அல்லது நிர்வாகிகளிடமோ உங்களுக்கு மனஸ்தாபம் இருந்தால் அவைகளைத் தேவனுடைய சமுகத்தில் ஊற்றி விடுங்கள். நீங்கள் கர்த்தரிடத்தில் ஊற்றி விடும்போது அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளுவார் மாறாக நீங்கள் ஆலயத்திலே அவர்களிடம் வாக்குவாதம் செய்யும் போது மீண்டும் ஒருவருக்கொருவர் மனஸ்தாபம் ஏற்பட்டுப் பிரிவினைகளை உண்டாக்கும். இதனைப் பார்க்கின்ற புறமதத்தவர் மத்தியில் கிறிஸ்துவின் நாமம் தூஷிக்கப்படுவதற்கு ஏதுவாகும். இதனால் உங்களுக்கு ஏன் சாபத்தை வருவித்துக் கொள்ளவேண்டும்.



10.கூடுகைகளில் பங்குபெறுதல்:

நாம் ஆலயத்திற்குச் செல்வதோடு மட்டுமல்லாமல் அங்கு நடைபெறுகிற சிறுவர், வாலிபர், ஆண்கள் மற்றும் பெண்கள் கூடுகைகளில் நமக்குரிய தகுதிகளுக்கு ஏற்பப் பங்குபெறவேண்டும். நாம் அப்படிப் பங்குபெருகின்ற போது நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் முன்னேறுவதற்கு உதவியாக இருக்கும்.



11. நேரம் தவறாமை:

நாம் ஆலயத்திற்கு ஆராதனை ஆரம்பிக்கும் முன்பதாகவே வருவது மிகவும் சாலச் சிறந்ததாகும். அலவலகங்களுக்கு மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு நாம் சரியான நேரத்திற்குச் செல்லுகின்ற நாம் ஏன் ஆலய ஆராதனைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. உலகப் பிரகாரமான ஆசிர்வாதங்களைத் தந்துள்ள கடவுளை நாம் தேடாமல் விட்டு விட்டால் அவரும் உங்களைக் கைவிடுவார்.




மேலே குறிப்பிடப்பட்டுள்ள காரியங்கள் அனைத்தையும் கடைபிடிக்க முயற்சிப்போம். கர்த்தர் நம்மை மென்மேலும் ஆசீர்வதிப்பார்.


ஜெபம்:
கர்த்தாவே இந்தப் பகுதியில் குறிப்பிட்டவைகளையெல்லாம் கைக்கொண்டு நடந்து அதன் மூலமாக மற்ற மக்களை உம்மண்டை வழிநடத்தும் கருவியாக என்னைப் பயன்படுத்தும். ஆமேன்

சாலமோனின் வீழ்ச்சி

"யெரொபெயாமை நோக்கி: பத்துத் துண்டுகளை எடுத்துக்கொள்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ராஜ்யபாரத்தைச் சாலொமோனுடைய கையிலிருந்து எடுத்துக் கிழித்து, உனக்குப் பத்துக் கோத்திரங்களைக் கொடுப்பேன்.ஆனாலும் என் தாசனாகிய தாவீதுக்காகவும், நான் இஸ்ரவேல் கோத்திரங்களில் எல்லாம் தெரிந்துகொண்ட எருசலேம் நகரத்துக்காகவும், ஒரு கோத்திரம் அவனுக்கு இருக்கும்"1 இராஜாக்கள் 11:31,32



கர்த்தர் சாலமோனை இந்த உலகத்தில் உள்ள ஐசுவரியத்தினாலும் ஞானத்தினாலும் மிகவும் அதிகமாக ஆசீர்வதித்திருந்தார். சாலமோனைப் போல ஐசுவரியத்திலும் ஞானத்திலும் கனம் பெற்றவன் இந்த உலகத்தில் ஒருவனும் இல்லை. சாலமோனுடையத் தரிசனத்தைத் தேடுவதற்குப் பற்பல நாடுகளில் இருந்தும் வந்துக் காத்துக் கிடந்தார்கள். இந்தச் சாலமோனுடையக் காலத்தில் பொன் வெள்ளியைப் போலத் தான் மதிக்கப் பட்டது. அப்படிப்பட்ட ஐசுவரியங்களைப் பெற்ற சாலமோனின் கடைசிக்காலத்தில் கர்த்தருடைய ஆசீர்வாதங்கள் குறைவு பட்டது. கர்த்தர் அகியா தீர்க்கத்தரிசியைக் கொண்டு இந்தச் சாலமோனுடைய நாட்களுக்குப் பிறகு இஸ்ரவேலின் ராஜ்ஜியம் இரண்டாகப் பிரிக்கப்படும் என்று கூறினார். இப்படிச் சாலமோனுடைய வாழ்க்கையில் கிடைத்த சாபங்களுக்குக் காரணம் என்னவென்று பார்ப்போமானால்


1.கர்த்தரின் கட்டளைகளை மீறுதல்:

சாலமோன் தனக்கு ஞானத்தையும் ஐசுவரியத்தையும் கனத்தையும் கொடுத்த தன்னுடையத் தேவனாகியக் கர்த்தரை மறந்து தன்னுடைய மனைவிகளின் விருப்பப்படி கர்த்தர் அவனை எச்சரித்திருந்தும் அந்நிய தெய்வங்களைத் தேடிக் கர்த்தரை விட்டு விட்டான்.

"ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சாலொமோனுக்கு இரண்டுவிசை தரிசனமாகி, அந்நிய தேவர்களைப் பின்பற்றவேண்டாம் என்று கட்டளையிட்டிருந்தும், அவன் கர்த்தரை விட்டுத் தன் இருதயத்தைத் திருப்பி, அவர் கற்பித்ததைக் கைக்கொள்ளாமற்போனதினால் கர்த்தர் அவன்மேல் கோபமானார்."1 இராஜாக்கள் 11:9,10

2. அந்நியத் தெய்வங்களுக்குப் பலீபிடம் கட்டுதல்:

சாலமோன் ராஜா அந்நியத் தேவர்களைத் தேடினதும் அல்லாமல் அந்தத் தெய்வங்களுக்குத் தன்னுடைய மனைவியரின் விருப்பப்படி அவைகளுக்குக் கோவில்களைக் கட்டி அவைகளுக்குப் பலியிடவும் செய்தான். இஸ்ரவேல் ஜனங்களையும் கர்த்தரைவிட்டு வழிவிலகிப்போகச் செய்தான். இப்படி அவன் செய்தக் காரியங்களினிமித்தம் கர்த்தர் அவன் மேல் மிகவும் கோபமானார்.

"அவர்கள் என்னைவிட்டு, சீதோனியரின் தேவியாகிய அஸ்தரோத்தையும், மோவாபியரின் தேவனாகிய காமோசையும், அம்மோன் புத்திரரின் தேவனாகிய மில்கோமையும் பணிந்துகொண்டு, அவன் தகப்பனாகிய தாவீததைப்போல என் பார்வைக்குச் செம்மையாய் இருக்கிறதைச் செய்யவும், என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்ளவும், அவர்கள் என் வழிகளில் நடவாமற்போனபடியினால் அப்படிச் செய்வேன்."1 இராஜாக்கள் 11 :33

3. சிற்றின்பப் பிரியனாக வாழ்ந்தான்:

சாலமோன் ராஜா தான் வாழ்ந்தக் காலத்திலே தனக்காகப் பெண்களைக் கொள்ளுவதிலும் தன்னுடைய மனைவியருக்காக அரண்மனைகளைக் கட்டுவதிலும் தன்னுடைய மனைவியரின் ஆசைகளை நிறைவேற்றுவதிலும் முன்னோடியாகத் திகழ்ந்து உலகத்திலும் அதின் ஆசைகளிலும் சிக்குண்டு சிற்றின்பப் பிரியனாகத் திரிந்துக் கர்த்தரை விட்டுவிட்டான்.

"அவனுக்குப் பிரபுக்கள் குலமான எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறு மறுமனையாட்டிகளும் இருந்தார்கள், அவனுடைய ஸ்திரீகள் அவன் இருதயத்தை வழுவிப்போகப் பண்ணினார்கள்" 1 இராஜாக்கள் 11:3


நாமும் கர்த்தருடையக் கட்டளைகளை மீறி நடந்து, அந்நியத் தெய்வங்களை நாடி, இந்த உலகத்தின் சிற்றின்பங்களிலேச் சிக்குண்டு அலைவோமானால் நாமும் கர்த்தர் நமக்குத் தருகின்ற ஆசீர்வாதங்களை இழக்க நேரிடும். மாறாக நாம் கர்த்தருக்குப் பிரியமாய் நடந்து, உலகத்தின் ஆசைகளை விட்டு நடப்போமானால் பரலோக இராஜ்ஜியத்திற்குச் சுதந்திரவாளியாகி இவ்வுலகத்தின் ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்ளுவொம்.





சிந்தனை: நான் கர்த்தருக்குப் பிரியமாக நடக்கிறேனா?


ஜெபம்:
அன்பும் இரக்கமும் நிறைந்த ஆண்டவரே நான் உமக்குப் பிரியமாக நடந்து அதன் மூலமாக இந்த உலகத்தின் அசீர்வாதங்களையும் பரலோக இராஜ்ஜியத்தையும் சுதந்தரித்துக் கொள்ள உதவி புரியும். ஆமேன்



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை நிகழ்வுகள் ஓவியமாக

இயேசு கிறிஸ்து மாட்டுத்தொழுவத்தின் முண்ணனையில் பிறந்த போது அவரது பெற்றோர் யோசேப்பு மற்றும் மரியாளுடன்


இயேசு பிறந்த எட்டாம் நாளில் விருத்தசேதனம் பண்ண ஆலயத்திற்கு வந்த போது சிமியோன் என்னும் முதியவர் ஆசீர்வதிக்க மரியாளிடம் குழந்தையை வாங்குகிறார்.

இயேசு தனது 12வது அகவையில் எருசலேம் தேவாலயத்திற்குத் தனது பெற்றோருடன் பண்டிகையை ஆசரிக்க வந்தார்


இயேசு கிறிஸ்து தனது 30வது அகவையில் யோர்தான் நதியில் யோவான்ஸ்நானகனால் ஞானஸ்னானம் பெற்றார்.


நல்ல மேய்ப்பன் இயேசு கிறிஸ்து

சிறு குழந்தைகளை நேசித்த இயேசு

இயேசு மறுரூபமான காட்சி

நாசரேத்தூரில் இயேசு ஜெப ஆலயத்தில் ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமம் வாசித்தார்.

எருசலேம் நகர் வீதியில் இயேசு பவணி வருகிறார்.

இயேசு சிலுவையில் மரிப்பதற்கு முந்தின இரவில் பஸ்கா பண்டிகையை ஆசரிக்கிறார்.

இயேசு சிலுவையில் மரிப்பதற்கு முந்தின இரவில் பிதாவிடம் ஜெபிக்கிறார்.

இயேசு கள்ளர்கள் மத்தியில் அறையப்பட்டார்,

இயேசு தாம் சொன்னபடி மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார்.

இயேசு உயிர்த்தெழுந்த பின்பாகத் தம்முடைய சீஷர்களுக்கு காட்சியளிக்கிறார்.

பாக்கியவான்/பாக்கியவதி

"கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்." சங்கீதம் 1 :2



கடந்த வாரத்தில் நான் ஊருக்குச் சென்று விட்டு இரயிலில் வந்து கொண்டிருந்தேன். நான் வந்த பெட்டியில் இரண்டு பெண்களும் ஒரு ஆணும் ஏறினார்கள். மூவரும் கிறிஸ்தவர்கள் என்று அவர்கள் பேச்சிலேத் தெரிந்தது. சிறிது நேரம் அவர்களது குடும்பங்களைப் பற்றிப் பேசிக் கொண்டு இருந்தனர். ஒரு பெண் மற்றொரு பெண்ணிடம் வேதாகமம் எடுத்து வந்திருக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண் கடந்த முறை வந்த போது எடுத்து வந்ததாகவும் அப்படி வந்தபோது அதை ஒவ்வொரு இடத்திற்குச் செல்லும் போது எடுத்துச் செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டதாகவும் அதனால் இந்த முறை எடுத்து வரவில்லை என்றும் கூறினார். ஆனால் அவர்கள் இரயிலில் ஏறும் போது கனமான பெட்டிகள் மற்றும் பையுடன் தான் ஏறினார்கள்.



சுமையானப் பைகளைக் கொண்டு வருவதற்கு அவர்களால் முடிகிறது ஆனால் 500 கிராம் எடை அளவு கூட இல்லாத வேதாகமத்தை அவர்களால் தூக்கிக் கொண்டு வரமுடிகிறதில்லை. அநேகக் கிறிஸ்தவர்கள் ஆலயத்திற்குக் கூட வேதாகமம் கொண்டு வருவது கிடையாது ஆனால் பள்ளிகளுக்கோ அல்லது கல்லூரிகளுக்கோ செல்லும்போது புத்தகமூட்டையை அள்ளிக் கொண்டுச் செல்லுகிறார்கள். உலகக் காரியங்களிலே நாட்டம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள். கர்த்தருடைய வேதத்தை மறந்து விட்டார்கள். நாளடைவில் கர்த்தரும் அவர்களை மறந்து விடுவார். இப்படிப்பட்டவர்கள் சமாதனக் குறைவினாலும் ஆசீர்வாதக் குறைவினாலும் அவதிப்படுவதை நான் பார்த்திருக்கின்றேன், நாம் கர்த்தரைத் தேடும் போது மட்டும் தான் அவர் நம்மை ஆசீர்வதிப்பார். நாம் கர்த்தருடைய வேதத்தையும் அவருடைய வல்லமைகளையும் நாடும் போது நாம் பாக்கியவான்களாயிருப்போம். இல்லையென்றால் நாம் அவர் கொடுக்கின்ற ஆசீர்வாதங்களுக்கு அபாத்திரராயிருப்போம்.





சிந்தனை: "வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது."நீதிமொழிகள் 28:9


ஜெபம்:
அன்பின் பிதாவே நான் உம்முடைய வேதத்தை நேசித்துக் கற்று அதின்படி நடந்து பாக்கியம் பெற்றவர்களாக வாழக் கிருபை தாரும். ஆமேன்



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

நோக்கிப் பார்

"அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை." சங்கீதம் 34:5



வேதநாயகம் சாஸ்திரியார் ஒரு முறை காட்டு வழியாகப் பல்லக்கில் சென்றுக் கொண்டிருந்தார். நான்கு பேர் பல்லக்கைத் தூக்கிக் கொண்டு வந்தனர். திடீரென ஒரு புலி அவர்களுக்கு எதிராக வந்து கொண்டிருந்தது. இதனைப் பார்த்ததும் பல்லக்கைத் தூக்கிக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் ஒடி விட்டனர். வேதநாயகம் சாஸ்திரியார் மட்டும் பல்லக்கில் இருக்கிறார். புலி பல்லக்கிற்கு மிக அருகில் வந்து விட்டது. ஆனால் வேதநாயகம் சாஸ்திரியாரோ ஓடாமல் கர்த்தரை நோக்கித் துதித்துப் பாடினார். பல்லக்கை நோக்கி வந்த புலி அமைதியாகச் சென்று விட்டது.ஆம் கர்த்தரை நம்பினோர் கைவிடப்படுவதில்லை



பரிசுத்த வேதாகமத்தில் பார்ப்போமானால்

1.ஈசாக்கு கர்த்தரை நோக்கிப் பார்த்த போது பிள்ளையில்லாமல் இருந்த ரெபேக்காள் கர்ப்பம் தரித்தாள்.
2.யாபேஸ் கர்த்தரை நோக்கிப் பார்த்த போது அவர் அவனை அதிகமாக ஆசீர்வதித்தார்.
3.சாலமோன் கர்த்தரை நோக்கிப் பார்த்தபொழுது யாருக்கும் கிடைக்காத ஞானத்தை அவனுக்கு அருளினார்.
4.எசேக்கியா ராஜா வியாதியாயிருக்கும் போது கர்த்தரை நோக்கி விண்ணப்பம் செய்தான். அப்பொழுது கர்த்தர் அவனுக்கு இரங்கி 14 வயது கூட்டிக் கொடுத்தார்.

இப்படி கர்த்தரை நோக்கும் போது அவர் செய்த அதிசயங்களைச் சொல்லிக் கொண்டேப் போகலாம். ஆம் பிரியமானவர்களே நாமும் கர்த்தரை நோக்கிப் பார்க்கும் போது அவர் நமக்கு விடுதலை அளிக்கிறார். நமது தேவைகளையெல்லாம் சந்திக்கிறார். நாம் முழுமையாக ஆண்டவரிடம் நம்மை அர்ப்பணிப்போம். கர்த்தர் நம்மை ஆசீர்வதித்து வழிநடத்துவார்.





சிந்தனை: நான் கர்த்தரை நோக்கிப் பார்க்கிறேனா? இல்லை மனிதர்களை நோக்கிப் பார்க்கிறேனா?


ஜெபம்:
கர்த்தாவே நான் உம்மை நோக்கிப் பார்த்து இரட்சிப்பைக் கண்டடையக் கிருபை தாரும். ஆமேன்



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

சிட்சை

"பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்."நீதிமொழிகள் 22:6



அந்தப் பெற்றோருக்கு அவன் ஒரே பையன் ஆகையால் அவனுக்கு மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்தார்கள். அவன் சிறு பையனாயிருக்கும் போதே மற்றவர்கள் வீட்டிலுள்ளப் பொருட்கள் இவனுக்குப் பிடித்தமாயிருந்தால் அவைகளை எடுத்துக் கொண்டு வந்து விடுவான். அவனுடையத் தாயாரும் இதைக் கண்டு கொள்வதில்லை. அது இவனுக்குத் தைரியத்தைக் கொடுத்தது. நாளடைவில் பள்ளியில் தன்னுடன் படிக்கும் பிள்ளைகளுடைய பேனா, பென்சில் போன்ற பொருட்களைத் திருடிக் கொண்டு வருவான். அவன் தாயார் அவன் செய்கின்றவைகள் தவறு என்று தெரிந்தும் அவனைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார். அவனுக்குப் படிப்பில் நாட்டம் இல்லாமல் படிப்பைப் பாதியிலே விட்டு விட்டு முழு நேரமாகத் திருட்டுத் தொழில் செய்ய ஆரம்பித்து விட்டான்.இப்படி ஒரு இடத்தில் திருடச் செல்லும் போது ஒரு பெண்ணைக் கொலை செய்து விட்டான். அவன் கண்டுபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். தீர்ப்பு நாளும் வந்தது. நீதிபதி அவனுக்குத் தூக்கு தண்டனை கொடுத்து தீர்ப்பளித்தார். அவனுடையத் தாயார் இதனை அறிந்ததும் அவனைப் பார்க்கச் சிறைச்சாலைக்குச் சென்றார். அவனைப் பார்த்து அழுதார். அதற்கு அவன் இப்பொழுது அழுது என்ன பிரயோஜனம். நான் சிறு வயதில் திருட ஆரம்பிக்கும் போது என்னைத் தண்டித்திருந்தால் இந்த நிலைமைக்கு வந்திருக்காது என்று சொன்னான்.



நாம் சிறு பிள்ளையிலிருந்தே நமது பிள்ளைகளைக் கண்டித்து வளர்ப்போமானால் நம்முடையப் பிள்ளைகள் நல்ல நிலைமையில் இருப்பார்கள். மாறாக நாம் நமது பிள்ளைகளை கண்டிக்காமல் வளர்ப்போமானால் அந்தத் தாயாருக்கு ஏற்பட்ட நிலைமை தான் ஏற்படும். சிறு வயதிலே தங்களுடையப் பெற்றோர் கண்டிப்புடன் வளர்த்ததினால் தான் நாங்கள் இப்பொழுது நல்ல நிலைமையில் இருக்கிறோம் என்று பல பேர் சாட்சி கூறினதை நாம் அறிந்திருக்கலாம். உதாரணத்திற்கு ஒரு சகோதரர் கூறியிருக்கிற சாட்சியை இந்த இணையதளத்தில் பார்க்கலாம்.சாட்சி





சிந்தனை: "உன் மகனை(ளை)ச் சிட்சைசெய், அவன் உனக்கு ஆறதல்செய்வான், உன் ஆத்துமாவுக்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்." நீதிமொழிகள் 29:27


ஜெபம்:
கர்த்தாவே நாங்கள் சிறுவயதிலிருந்தே எங்களுடையப் பிள்ளைகளை உம்முடையப் பாதையில் நடத்துவதற்குக் கிருபை தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்