பெருமையின் வீழ்ச்சி

"அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும் ."தானியேல் 4:37

நேபுகாத்நேச்சார் என்கின்ற பாபிலோனை ஆண்ட ராஜா வர வர மிகவும் பலப்பட்டுக் கொண்டு போகின்றான். நேபுகாத்நேச்சார் பல தேசங்களின் ராஜாக்களை வீழ்த்தி மிகவும் பலமான சக்கரவர்த்தியாக ஆனான். அவன் உயர்வைப் பெற்ற பின்பாக அவனுக்குள் பெருமை குடி கொள்ள ஆரம்பித்து விடுகின்றது. தனக்கென்று சிலை உண்டாக்கி அதனை அனைவரும் வணங்கச் செய்யும் அளவுக்கு மிகவும் பெருமை கொண்டான். சாத்ராக், மேஷாக் , ஆபேத் நேகோ ஆகிய மூவரும் அக்கினிக்குத் தப்புவிக்கப்பட்டும் நேபுகாத்நேச்சார் தாழ்மையைத் தரிக்கவில்லை .



நேபுகாத்நேச்சார் கடவுள் தான் தனக்கு ஆளுகை செய்யும் அதிகாரத்தைத் தந்திருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ளவில்லை. ஆகவே நேபுகாத்நேச்சாரை சொப்பனத்தின் மூலமாக ஆண்டவர் எச்சரிக்கைக் கொடுக்கின்றார். தானியேல் சொப்பனத்தின் அர்த்தத்தை விளக்கி தன்னுடையப் பாவங்களை எல்லாம் விட்டுவிட்டு மனத்தாழ்மையைத் தரித்துக் கொண்டு சிறுமையானவர்களுக்கு இரங்கி அக்கிரமத்தை விட்டுவிட எச்சரிக்கை செய்கின்றார்.


எச்சரிப்பின் சத்தத்தை உணர்ந்து கொள்ளாத நேபுகாத்நேச்சார் மீண்டும் பெருமை கொண்டு தன்னை தான் புகழுகின்ற போது அவன் மனிதரினிற்று தள்ளப்பட்டு மிருகத்தைப் போலப் புல்லைத் தின்கின்றான். நீண்ட நாட்கள் ஆனபின்பு கடவுளால் தான் தனக்குத் தேசங்களை ஆள அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து கொள்ளுகின்றான். ஆண்டவரைப் போற்றிப் புகழுகின்றான். ராஜ்ஜியத்தின் ஆளுகையை மீண்டும் பெற்றுக் கொண்டு தாழ்மையைத் தரித்துக் கொண்டான்.

சிந்தனை: நான் என்கின்ற சுய பெருமையோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோமா அல்லது தாழ்மையாய் நடக்கின்றோமா?

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, என்னிலுள்ள பெருமை குணங்களை நீக்கி விட்டு நான் தாழ்மையாய் நடந்து உம்மை மகிமைப்படுத்த உதவி புரியும். ஆமேன்